இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்த எனக்கு இது தலை நோன்புப் பெருநாள். மலேசியாவின் பாகாங் மாநிலம், குவாந்தான் நகரில் வசிக்கும் என் மனைவியின் பெற்றோர் வீட்டில் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணமான சில நாட்களிலேயே திட்டம் போட்டாகிவிட்டது.
ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்று இந்த அளவுக்கு வீரியத்துடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் சிறிதும் எண்ணவில்லை.
நிலைமை கூடிய விரைவில் சீராகிவிடும் என்று நம்மில் பலரும் எண்ணுவதுபோல நானும் நம்பிக்கையுடன் இருந்தேன்.
வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.
நோன்புப் பெருநாளை ஒட்டி நான் எடுக்க இருந்த விடுப்பையும் ரத்து செய்துவிட்டேன்.
ஆனால், புதுமணத் தம்பதியாக நாங்கள் எனது பெற்றோருடன் சேர்ந்து நோன்புப் பெருநாளைக் கொண்டாடு வதிலும் தனிச் சிறப்புண்டு.
எனது மூத்த சகோதரருக்கு முதல் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகப் போகிறது.
புதிய தலைமுறையை நாங்கள் வரவேற்று கொண்டாடும் முதல் பெருநாள் இது. அத்துடன், 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இல்லத்திற்கு நாங்கள் அண்மையில் குடியேறியுள்ளோம்.
பாட்டி, பெற்றோர், சகோதரர்கள் என அனைவரும் ஒரே கூரையின்கீழ் வசிக்க எங்கள் பெற்றோர் பெரிய முயற்சி எடுத்துள்ளனர்.
கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் நன்மை உண்டு. அதுவும் குழந்தைகள் வளரவும் புதிதாகத் திருமணமான இளம் தம்பதியினர் நிலையுடன் வாழ்க்கையைத் தொடங்கவும் கூட்டாக இருந்தால் சிறப்பு என்று எங்களுக்குப் பாடம் புகட்டியுள்ளனர் எங்கள் பெற்றோர்.
இந்நிலையில், புதிய இல்லத்தில் புதிய வரவுடன் தலை பெருநாளைக் கொண்டாடுவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
கொவிட்-19 கிருமித்தொற்று சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் தமது பெற்றோரை இன்னும் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் எனது மனைவி உள்ளார். நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் இருக்கிறோம்.
பெருநாள் கொண்டாட்டம் நினைத்ததுபோல் இல்லையென்றாலும் கொண்டாட்டத்தின் அளவில் சிறிதளவும் குறைவு இல்லை.
முப்பது நாட்கள் நோன்பு நோற்று தினமும் அதிகாலை ‘ஸஹர்’ உணவையும் மாலை நோன்புத் துறப்பு உணவையும் குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்து வீட்டில் அருந்தியது மறக்கமுடியாத அம்சம்.
கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக அனைவரும் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் தனித்தனியே நோன்பு துறந்தோம்.
ரமலான் மாதத்தின் ஒரு நாள்கூட குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து நோன்பு துறக்காமல்போன ஆண்டுகள் பல. இந்த ரமலான் மாதத்தில் என் மனைவி, சகோதரர்களுடன் சேர்ந்து தொண்டூழியப் பணியிலும் ஈடுபட்டதும் சிறப்புகளில் ஒன்று.
புனித ரமலானை சிறப்புடன் கழித்து இனிய நோன்புப் பெருநாளை வரவேற்றதில் மகிழ்ச்சியடைகிறோம்.