புது வீட்டுக்கான சாவி ஏப்ரல் மாதமே கிடைத்துவிட்டது. ஆனால் கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்புக்கு வந்ததால், தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
தற்போது புது வீட்டிற்குள் குடிபுக முடியாத நிலையில் இருக்கும் திருமதி ஷாநவாஸ் ருஸானா பானு, செங்காங் பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டில் தமது கணவர், பிள்ளைகளுடன் நோன்புப் பெருநாளை கொண்டாடுகிறார்.
அதோடு, மார்சிலிங் கடைத்தொகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘உட்ஸ் ஃபார்மசி’ எனும் மருந்துக்கடையை நடத்திவரும் ருஸானா, கிளார்க் கீ பகுதியில் கடை ஒன்றையும் இம்மாதம் திறக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதையும் இப்போது தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“ரமலான் மாதத்திற்குள் வீட்டு சீரமைப்புப் பணிகளை நடத்த திட்டமிட்டிருந்தோம். நோன்பு பெருநாளுக்குள் புது வீட்டில் குடிபுகுந்து, உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடலாம் என்று நினைத்தேன். பெருநாளை கொண்டாடுவதுடன் உறவினர்களுக்கு வீட்டையும் காட்டலாம். நோன்புப் பெருநாளின் ஒரு முக்கிய அம்சம் குடும்பத்தினரைச் சந்திப்பது. இவ்வாண்டு அதைச் செய்ய முடியவில்லை,” என்றார் ருஸானா, 31.
“ரமலான் மாதத்தில் பள்ளிவாசலுக்குச் செல்வோம். உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு ரமலான் மாதம் ஒரு நல்ல தருணம். இவ்வாண்டு அது இயலவில்லை. ஆனால் இஸ்லாமிய சமயத்தில் பொறுமை ஒரு முக்கிய குணமாக கருதப்படுகிறது. அதன் பொருட்டு, உறவினர்களை மீண்டும் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்வரை பொறுமையுடன் காத்திருப்போம்,” என்றார் ருஸானா.
இவரது தந்தை திரு முகம்மது காசிம் ஷாநவாஸ், 60, தாயார் திருமதி ஷாநவாஸ் வாஹிதா பானு, 57, ஆகிய பெற்றோரின் வீட்டில் கணவர் திரு அவுன் முகம்மது, 32, மகன் அப்துல் ஜஹீர், 8, மகள் ஜியானா மும்தாஜ், 3, ஆகியோருடன் ருஸானா 2011ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாக வசித்து வருகிறார்.
திரு ஷாநவாஸ் தமிழ் எழுத்தாளராகவும் ‘கறி வில்லேஜ்’ உணவகத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
“அத்தியாவசிய சேவை துறை என்பதால் என் கடை திறந்துள்ளது. தினமும் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கடைக்குச் செல்வேன். பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால் பேரக்குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட முடிகிறது. புது புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறேன்,” என்றார் ஷாநவாஸ்.
ரமலான் மாதத்தில் உறவினர்களைக் இணைய காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு பேசிய இவர், பெருநாள் அன்றும் அவ்வாறே ஒருவர் மற்றொருவருக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதாக சொன்னார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பலருக்கும் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலில் ருஸானாவின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இருந்தாலும், சவால்மிக்க இந்த நேரத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்தேறியதாகவும் ருஸானா கூறினார்.
இணையம்வழி மருந்து விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக சொன்ன இவர், வாடிக்கையாளர்கள் நேரடியாக மருந்துக்கடைக்கு வந்து வாங்கிச் செல்வதால் கடையில் விற்பனை 50% உயர்ந்திருப்பதாகவும் ருஸானா தெரிவித்தார்.
“சாதாரண உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்தகத்திற்குச் செல்ல பலரும் பயப்படுகிறார்கள். வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு போன்ற வழக்கமான உடல் உபாதைகளுக்கு மருந்துக்கடைகளில் விற்கப்படும் மருந்து நிவாரணம் தருவதால் அதை நம்மிடம் வாங்குகின்றனர். வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருக்க இணையம்வழி பலர் மருந்தை வாங்குகின்றனர்,” என்றார் ருஸானா.
சிங்கப்பூரின் மருந்து விற்பனைத் துறையில் பல பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால், சிறிய மருந்துக்கடைகள் போட்டிபோடுவது கடினம் என்பதைச் சுட்டிய ருஸானா, தமது கணவரின் உந்துதலால் கடையை நடத்தி வருவதாகச் சொன்னார்.
“கட்டுப்படியான விலையில் மருந்து விற்பதுடன் தனிப்பட்ட சேவைகளையும் வழங்குவதால் பலரும் எங்களை நாடுகிறார்கள்,” என்றார் இவர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 நோய் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை நினைவுகூர்ந்த ருஸானா, அப்போது கிட்டத்தட்ட 500,000 முகக்கவசங்களையும் கிருமிநாசினி, உடல் வெப்பமானி போன்ற பொருட்களையும் பல நிறுவனங்களுக்கும் சமூகத்தினருக்கும் விநியோகம் செய்து விற்றதாகக் கூறினார்.
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் நோன்பு வைப்பதற்கும் துறப்பதற்கும் தாயார் திருமதி வாஹிதா ருசியான உணவைச் சமைத்ததாகச் சொன்ன ருஸானா, குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதற்கு தற்போதைய சூழலில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
நோன்புப் பெருநாள் அன்று காலை வேளையில் வீட்டில் குடும்பமாக சேர்ந்து தொழுகை மேற்கொண்டு உணவு சாப்பிட்டு, இனிப்பு பலகாரங்களை ருசித்து அந்நாளை மகிழ்ச்சியுடன் செலவிட்டனர் ருஸானாவின் குடும்பத்தினர்.