கொவிட்-19 கிருமிப் பரவல் காரணத்தால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யேல்-என்யுஎஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா முதன்முறையாக மெய்நிகர் பாணியில் நடைபெற்றது. வீட்டிலிருந்த
படியே இதில் கலந்துகொண்ட 183 மாணவர்களில் கிரிஷன் சஞ்ஜெய் மஹேஷும் ஒருவர். liberal arts எனப்படும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முழுமையான கல்வி அனுபவத்தைப் பெற்ற இவருக்கு இம்மாதம் 18ஆம் தேதியன்று ‘மெய்நிகர் மேடை’யில் பட்டக்கல்விச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
“இவ்விழாவை என் பெற்றோருடன் யூடியூப் காணொளி இணைப்பு வழியாகப் பார்த்தேன். நண்பர்களுடன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போனது வருத்தமளித்தாலும் கொரோனா கிருமிப் பரவலின்போது பட்டம் பெற்றது என் வாழ்க்கையின் ஒரு சுவாரசியமான அனுபவமாக என்றுமே இருக்கும்,” என்று இவர் கூறுகிறார்.
கல்வியமைச்சின் ஆசிரியர் கல்விமான் விருதைப் பெற்ற கிரிஷன், இப்பள்ளியில் இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்துடன் உளவியல் பாடத்தையும் பயின்றார்.
“நான் ஆசிரியர் ஆவேன் என இளம் வயதில் நினைக்கவில்லை. விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் படித்தபோதுதான் என் எதிர்காலம் குறித்த தீவிர சிந்தனை தொடங்கியது,” எனத் தெரிவித்தார்.
செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையத்திலும் பயின்ற கிரிஷன், “என் உயர்நிலைப் பள்ளியின் உயிரியல் பாட ஆசிரியர் திரு லிம் மெங் சாய்யின் கற்றல் அணுகுமுறை வெகு காலம் ஆகியும் என்னைக் கவர்ந்துள்ளது. அவருடன் ஏற்பட்ட பழக்கம் வருங்காலத்தில் என்னை ஆசிரியர் ஆகத் தூண்டியிருக்கும் என நினைக்கிறேன்,” என்றார்.
இயற்பியலை முக்கியமான துறையாகக் கருதும் கிரிஷன், யேல்-என்யுஎசின் விரிவான பாடத்திட்டத்தின் வழி இலக்கியம், வரலாறு, உள்ளிட்ட மாறுபட்ட துறைகளில் பாடம் கற்க முடிந்ததாகத் தெரிவித்தார்.
“இந்த அனுபவம் மற்ற அறிவியல் பட்டப்படிப்புத் துறைகளில் எனக்குக் கிடைத்திருக்காது. பல்வேறு துறைகளில் நாட்டம் உள்ள மாணவர்களுடன் பணியாற்றும் எனக்கு இந்தக் கல்வியின் வழி கிடைத்துள்ள பலகோண சிந்தனைத் திறன் வருங்காலத்தில் எனது பணிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன்,” என்றார்.
உன்னிப்பாகக் கவனிக்கும் திறனும் தன்முனைப்புமே கிரிஷனின் வெற்றிக்குக் காரணம் என்று அவர் தாயார் திருமதி ராணி சுப்பையா, 49, தெரிவித்தார்.
சுறுசுறுப்பும் உழைப்பும் கூடிய கிரிஷன், வகுப்புகளில் பிற மாணவர்களுக்கு உதவி செய்வதாக பல்கலைக்கழகத்தில் அவருக்குக் கற்பித்த இயற்பியல் பேராசிரியர் அலெக்ஸாண்டர் ரோடின், 34, தெரிவித்தார்.
“வாழ்க்கையில் நாம் எதற்கு மதிப்பளிக்கிறோமோ, அதுவே எதிர்காலத்தில் நாம் எப்படிப்பட்ட ஆசிரியராக இருப்போம் என்பதை உறுதி செய்யும். எனவே எது முக்கியம் என்பதை முன்கூட்டியே சிந்தித்து வைத்துக்கொள்வது நல்லது,” என்று ஆசிரியர் ஆக விரும்புவோருக்கு இவர் அறிவுரை கூற விரும்புகிறார்.