கி.ஜனார்த்தனன்
இணையப் பயிலரங்குகள் என்பது வெறும் தகவல்களை மனனம் செய்வது மட்டுமல்ல என்று அவற்றை ஏற்று நடத்தும் தீபன் ராஜா முத்துசாமி (படம்) கூறுகிறார்.
இணைய வகுப்புகளுக்காக கணினி முன்பு ஒரு சில மணி நேரம் அமர்வதில் பலருக்கு சோர்வு ஏற்படுவதால் அவர்கள் இவற்றில் சேரத் தயங்குவதாகக் கூறிய திரு தீபன், மின்னிலக்கத் தளங்களின்மூலம் இருவழித் தொடர்பு அம்சங்களைச் சேர்ப்பதாகக் கூறினார்.
‘எல்விகர்’ பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இவர் தொழில்நுட்பப் பயன்பாட்டில் நிபுணத்துவம் பெறவில்லை. இருந்தாலும், இணைய வகுப்புகளுக்காக தம்மை சுயமாக தயார்ப்படுத்திக்கொண்டதாக இவர் கூறினார்.
“ஒலி, ஒளி அளவு மற்றும் காணொளிப் படங்களின் தரம் சரியாக உள்ளனவா என்பதை நான் உறுதி செய்யவேண்டி இருந்தது. இதற்கான தொழில்நுட்பக் கருவி
களைக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டியிருந்தது,” என்று தீபன் கூறினார்.
புதியவற்றைத் தெரிந்துகொள்ளும் முனைப்புடன் வரும் சிலருக்கு இணையம்வழி கற்பது தடையல்ல என்றாலும் வேறு சிலருக்கோ வகுப்புச் சூழலின்றி சிரமத்தை எதிர்நோக்குவதாக திரு தீபன், 34, தெரிவித்தார்.
புதிர், கருத்துக்கணிப்பு, கலந்துரையாடல் போன்ற உத்திகளின்வழி பங்கேற்பாளர்களின் ஈடு பாட்டை இவர் அதிகரிக்க முனைகிறார்.
“பங்கேற்பாளர்களின் கவனத்திற்கும் புதிய தகவல்களை உள்வாங்கும் ஆற்றலுக்கும் ஏற்ற விதத்தில் வகுப்பு நேரம் இருப்பதை நான் உறுதி செய்வேன்,” என்று தீபன் கூறினார்.
தலைமைத்துவம், வேலைத்
திறன் உள்ளிட்டவற்றைப் பற்றி கற்பிற்கும் திரு தீபன், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்பதற்கு வீட்டில் முடங்கியுள்ள தற்போதைய சூழல் உகந்தது எனக் கருதுகிறார்.
இத்தகைய வகுப்புகளில் சேர்வதற்குமுன் தங்களது இலக்குகள் என்ன என்பதைப் பற்றி முன்கூட்டியே உறுதி செய்து அதற்காக ஆய்வு செய்யவேண்டும் என்பதே பலருக்கும் இவர் வழங்கும் ஆலோசனை.