வர்த்தக ஆலோசகரான விக்ரமன் ராஜரத்தினம் (படம்), கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்கொள்வதற்கான திட்டத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பல்வேறு திறன்களைக் கற்றுக்கொண்டார். இணைய வசதியால் இப்போது உலகமே இவருக்கு வகுப்பறை.
“நியூசிலாந்தில் தற்போது இருக்கும் பிரபல பாடகர் யுகேந்திரனிடமிருந்து காணொளி உரையாடல் வழியாகப் பாடக் கற்றுக்கொள்கிறேன். அத்துடன், நகைச்சுவை நடிப்புக்கான வகுப்புகளிலும் நான் பங்கேற்றேன்,” என்று இவர் தெரிவித்தார்.
யோகா, கணினித் திறன் மேம்பாடு ஆகியவற்றையும் கற்றுக்கொண்ட விக்ரமன், தமது கண்ணோட்டத்தை விரிவுபடுத்தவே இந்த வகுப்புகளில் சேர்ந்ததாகச் சொன்னார்.
“அத்துடன், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நான் வெளியே போக முடியாததால் தொற்றிக்கொண்ட மன உளைச்சலை இத்தகைய வகுப்புகள் போக்குகின்றன,” என்று இவர் கூறினார்.
வீட்டிலிருந்து கற்றலை மேற்கொண்டதால் தாம் சுயமாகச் செயல்படும் உணர்வைப் பெறுவதாக விக்ரமன், 30, தெரிவித்தார்.
“இந்தக் காலகட்டத்தில்தான் என்னைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் மேலும் தெரிந்துகொண்டேன். குறிக்கோள் இல்லாமல் நேரத்தை செலவு செய்வதைக் காட்டிலும் இணையம்வழி கற்பது எவ்வளவோ சிறந்தது. சமூகத்திற்குப் பங்காற்ற இந்தத் திறன்களை நான் பயன்படுத்துவேன்,” என்று விக்ரமன் தெரிவித்தார்.