அலுவலகத்தில் வேலை செய்யும்போது கேள்வி எழுந்தால் உடனே அருகில் உள்ளவர்களிடம் அறிவுரை கேட்டுவிடலாம். ஒரு சிறு கலந்துரையாடல் நிகழும். அறிவுரையுடன் கொஞ்சம் நகைச்சுவையும் வரும். அனைத்தும் கலந்த தெளிவான சிந்தனை பிறக்கும்.
தேநீர் அருந்திகொண்டே நடக்கும் ஒரு சிறு கலந்துரையாடல்கூட வேலை பளுவைக் குறைத்துவிடும்.
மன உளைச்சல் ஏற்படும்போது வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பி அன்றே நண்பர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாம். திரைப்படம் பார்க்கச் செல்வது, உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போவது, ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகளே மனச்சுமையைக் குறைத்துவிடும். இவையெல்லாம் இயல்பான வாழ்க்கைமுறையாக இருந்த காலத்தில். என்னைப் போலவே பலரின் வாழ்க்கையை கொவிட்-19 அப்படியே திருப்பி போட்டுள்ளது.
இப்போதெல்லாம் என் வீட்டு வரவேற்பு அறைதான் எனது அலுவலகம். மடிக்கணினிதான் என் உலகம் என்றாகிவிட்டது.
கடந்த நான்கு மாதகங்களாக வீட்டிலிருந்து வேலை செய்யும் எனக்கு இது பழகிவிட்டது என்றாலும் மனித தொடர்புகளுக்காக மனம் ஏங்கவே செய்கிறது.
என்னைப் போலவே பல இளையர்கள் இந்தத் தனிமை உணர்வை அனுபவிக்கிறார்கள். எனினும், ஒரு பரந்த கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இது ஒரு பெரிய பிரச்சினையாக தோன்றாது. கொரோனா கிருமியால் பாதிப்படைந்தோர் நம்மைவிட அதிக வேதனையை அனுபவிக்கிறார்கள். வசதி குறைந்த மாணவர்கள் கற்றலுக்குத் தேவையான வசதிகளைப் பெற பல தடைகளை எதிர்நோக்குகிறார்கள். நிறுவனத்தின் கீழ் பணிபுரியாமல் பல தன்னுரிமைத் தொழிலாளர்கள் (freelancers) மற்றும் சுய தொழில் நடத்துபவர்கள் வருமானம் இல்லாத பட்சத்தில் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
முதல்நிலை ஊழியர்கள், குறிப்பாக சுகாதார துறையினரின் சவால்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இவர்களுடன் ஒப்பிடும்போது என் கவலை பெரிதாக தெரியவில்லை. தீங்கை மட்டும் பார்ப்பதும் ஞானத்திற்கான வழி அல்ல.
இவ்வளவு பிரச்சினைகளிலும் உலகத்திற்குச் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தெருக்களில் வாகனங்கள் குறைந்துள்ளன, காற்று சுத்தமாகியுள்ளது, விலங்குகள் வெளியே வர தொடங்கியுள்ளன. மனிதன் நோய்வாய்ப்படும் இந்த நேரத்தில், உலகம் குணமடைந்து வருவதாக தெரிகிறது. மனிதர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்பட்டு வருகிறோம். குடும்ப உறுப்பினர்களுடன் அணுக்கமாகி உள்ளோம். உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் செய்ய அதிக நேரம் கிடைத்துள்ளது.
வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் உள்ளத்து உணர்வுகளை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை கொவிட் நமக்குத் தந்துள்ளது. நாம் வாழும் குறுகிய காலத்தில் முக்கியமானவற்றுக்கு நேரத்தைச் செலவிட வேண்டும்.
அன்பு, ஆரோக்கியம், நற்பண்புகள் படைத்த மனிதனாக உருமாற கொவிட் நமக்கு வாய்ப்பளித்துள்ளது.
அதே நேரத்தில் சமூகத்தில் புதைந்து கிடக்கும் பிரச்சினைகளையும் வெளிப்படையாக நம் பார்வைக்கு எடுத்து காட்டியுள்ளது.
அடுத்து வரும் ஆண்டுகளில் அதைத் தீர்க்க அரசாங்கங்களும் மக்களும் கடும் முயற்சி எடுக்க உறுதி செய்யவேண்டும். அதோடு உலகுக்கும் மனிதனுக்கும் உகந்த பாதையில் செல்ல நாம் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.