கடந்தாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூருக்காக இரு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தவர் சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனை சி. ஸ்நேஹா.
ஆனால் அவர் இதனை சாதித்த விதம் எளிதல்ல. ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் கடந்தாண்டு ‘ஜிசிஇ’ மேல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் அதேவேளையில் நவம்பர் மாத இறுதியில் அவர் தென்கிழக்காசிய போட்டிகளில் பங்குபெறுவ தாக இருந்தது.
பள்ளிப் பாடங்கள் இல்லாதபோது சுவர்ப்பந்து பயிற்சிகளுக்கென ஆண்டு முழுவதும் முக்கியத்துவம் கொடுத்து அவர் செயல்பட்டார்.
“சவால்மிக்க, மனஉளைச்சல் தரும் காலகட்டமாக இருந்தது. ஏனெனில் படிப்பு, விளையாட்டுப் பயிற்சியைத் தவிர வேறு எதிலும் என்னால் அதிகம் ஈடுபட முடியாமல் இருந்தது,” என நினைவுகூர்ந்தார் 19 வயது ஸ்நேஹா.
தம் தந்தையிடம் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது, இசை கேட்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் அக்கால கட்டத்தைக் கடந்து வர உதவின.
கடின உழைப்பின் பலனாக விளையாட்டில் சாதித்ததுபோல மேல் நிலைத் தேர்வில் இவர் ஐந்து ‘ஏ’ எனும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றார்.
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான அமெரிக்காவின் ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஸ்நேஹா மேற்கொள்ள கதவு திறந்தது. கிடைத்த அரிய வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழல் உலகை ஆட்டிப்படைக்க, அமெரிக்காவையும் அது விட்டு வைக்கவில்லை.
அங்கு பெரிதளவில் கிருமி பாதிப்பு இருக்க, அங்கு சென்று கல்விப் பயணத்தைத் தொடரலாமா என்ற குழப்பான நிலையில் சிங்கப்பூர் மாணவர்கள் பலர் உள்ளனர்.
உள்ளூர் பத்திரிகைகளின் அண்மைய செய்திகளின்படி, சிலர் வெளிநாட்டிற்குச் சென்று படிக்கும் திட்டத்தைக் கைவிட்டு உள்ளூரிலேயே படிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
வேறு சிலரோ நிலைமை சீராகும் வரையில் தங்களின் படிப்பை ஓராண்டிற்கு தள்ளிவைத்துள்ளனர். ஸ்நேஹாவோ வரும் ஆகஸ்ட் மாதம் தம் பட்டப்படிப்பை ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் பயில ‘விசா’ விண்ணப்பம் குறித்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
திட்டமிட்டபடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல அவர் தம்மைத் தயார்படுத்திக் கொண்டும் வருகிறார்.
உலகத் தரம் வாய்ந்த சுவர்ப்பந்து விளையாட்டு வசதிகளுடன் திறன்மிக்க பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டாளர்களுடன் இணைந்து தம் ஆட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது இவரது இலக்கு.
“வித்தியாசமான கற்றல் சூழலை அனுபவிக்கவும் மீண்டும் சுவர்ப்பந்துப் போட்டிகளில் பங்குபெறவும் இன்னும் சில மாதங்கள் காத்திருப்பேன். அதற்குள் கொவிட்-19 நிலவரம் அங்கு மேம்பட்டுவிட வேண்டும் என்று நம்புகிறேன்,” என்று சொன்னார் ஸ்நேஹா.
கொவிட்-19 நிலவரம் குறித்து, அதன் வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘யேல்’ பல்கலைக்கழகம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் ஸ்நேஹா தம் அடுத்த கட்ட பயணத்துக்கு தயாராக உள்ளார்.