சிங்கப்பூர் இதுவரை கண்டிராத புதுவித பொதுத் தேர்தல் நிகழ்வுகளை இவ்வாண்டு நாம் கண்டோம். பாலின சமத்துவம், சிறுபான்மை உரிமைகள், புதிய அரசாங்க கட்டமைப்புகள் போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனது தலைமுறையினர், இந்தத் தேர்தலின்போது கருத்துகளைத் தைரியமாக முன்வைத்தும் வெளிப்படுத்தியும் வந்து உள்ளனர். பல சர்ச்சைக்குரிய கருத்துகளையும் விவாதங்களையும் ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்டகிராம்’ சமூக ஊடகத் தளங்களில் பலர் பதிவுசெய்திருந்தனர்.
தொற்றுநோய் கால வாக்கெடுப்பில், 2.65 மில்லியன் வாக்காளர்களின் ஆதரவை வெல்ல, சமூக ஊடகங்களும் இணைய வாசல்களும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன என்பதைக் கட்சிகளும் வேட்பாளர்களும் நன்கு அறிந்திருந்தனர். இதுபோன்ற கருத்து பரிமாற்றங்கள் பல பிரச்சினைகளை முன்வைத்து மக்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்தன.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழலின் சவால்களுக்கு மத்தியில் ஒன்பது நாட்கள் தேர்தல் பிரசாரத்திற்குப் பிறகு, வாக்குப்பதிவு நடைபெற்றது.
மரின் பரேட் வட்டாரத்தில் வசிக்கும் நான், மதியம் இரண்டு மணிக்கெல்லாம் கிளம்பி குடும்பத்தினருடன் வீட்டிற்கு அருகிலுள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன். காலையிலேயே எனது நண்பர்கள் பலர் அவர்களது வாக்களிப்பு நிலையங்கள் நெரிசலாகவும் நீண்ட வரிசைகளுடனும் இருந்ததாக என்னிடம் கூறினர்.
எனவே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க என்னை மனதளவில் தயார் செய்துகொண்டேன். ஆனால், எனது வாக்களிப்பு நிலையத்தில் கூட்டம் அதிகம் இல்லை. மொத்தமாக அந்நிலையத்தில் 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவிட்டேன். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு, அதிகாரி கள் எனது அடையாள அட்டையை ‘ஸ்கேன்’ செய்து, வாக்களிப்பு அட்டையைக் கொடுத்தனர்.
கைகளைச் சுத்திகரிப்பான் கொண்டு சுத்தப்படுத்துதல், கையுறைகளை அணிதல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிறகு என் வாக்கை பதிவு செய்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒன்பது நாட்களாக கட்சி பிரசாரங்கள், மக்களின் கருத்துகள் என அனைத்தையும் கண்டு, கேட்டதற்குப் பிறகு எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்ற தெளிவான முடிவை எடுத்தேன்.
இருப்பினும் வாக்களிப்பு நிலையத்தில் முத்திரையிடும் பேனாவைக் கையில் எடுத்தவுடன் ஒரு விதமான பதற்றம் ஏற்பட்டது.
ஒருவருடைய வாக்கு நாட்டின் நல்லாட்சியை முடிவுசெய்வதில் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று இதற்குமுன் என்னையே நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால் இந்தத் தேர்தல், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. வாக்காளர் விழிப்புணர்வுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எனக்குப் புரிய வைத்தது. ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் முக்கியமானது. முடிவுகளைக் கணிக்க முடிந்தாலும் மாற்றங்களை செயல்படுத்த, நமது எதிர்காலத்தை தீர்மானிக்க, ஒவ்வொரு வாக்கும் அவசியம்.