கொவிட்-19 கிருமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் நாட்டு பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. வேலை தேடும் சூழல், புதிய பட்டதாரிகளுக்குப் பெரும் சவால் விடுத்து வருகிறது. நிறுவனங்களும் இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளன. இதனை எதிர்கொள்ள அரசாங்கம் பல்வேறு வேலைப் பயிற்சித் திட்டங்களையும் வேலைவாய்ப்புத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இது குறித்து ‘தமிழா’ மற்றும் சிண்டாவின் இளையர் மன்றம் இணைந்து ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று இணையக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்திய இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட ‘இக்நைட் தீ யூத் நெட்வொர்க்கிங் நைட்’ (Ignite the Youth Networking Night) என்ற நிகழ்வு, பல்கலைக்கழக மாணவர்களுக்காக குறிப்பாக இளங்கலை பட்டதாரிகளுக்காக அமைந்திருந்தது.
முழுநேர வேலையைத் தொடங்குவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது இந்த மெய்நிகர் கலந்துரையாடல். பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் உரையாடுவதற்கான வாய்ப்பையும் இந்நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.
“வேலை வாழ்க்கையின் எதார்த்தத்தை வெளிப்படுத்தவும் வேலை தேடலுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் இக்கலந்துரையாடல் உதவுகிறது. அத்துடன் தொழில் வல்லுநர்களுடன் பட்டம் பெறுவோர் இணைவதற்கு ஒரு தளத்தை உருவாக்க நினைத்தோம். அவர்கள் வேலை தேடும்போது பயன்மிக்கதாக இருக்கும் என நம்புகிறோம்,” என்று தெரிவித்தார் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான மணிகண்டன்.
இந்த கலந்துரையாடலில் கணக்கியல், வணிகம், தரவு அறிவியல் / பகுப்பாய்வு, பொறியியல், சுகாதாரம், சமூக சேவை, பொது நிர்வாகம், சமூக அறிவியல் போன்ற தொழில்துறைகளைச் சேர்ந்த 15 தொழில் வல்லுநர்களும் 32 இளைஞர்களும் கலந்துகொண்டனர். நிபுணர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு கிடைக்கும் வாய்ப்புகளை எவ்வாறு சாமர்த்தியமாக பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர். தற்போதைய சூழலில் வேலைவாய்ப்புகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன, எதிர்கால மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் எவ்வாறு தயார் செய்து கொள்ளலாம் போன்றவற்றின் தொடர்பில் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர்.
அத்தகைய நிபுணர்களில் ஒருவரான தரவு ஆய்வுத் துறையை சேர்ந்த குமாரி பெலிஸியா, “அடிப்படை தொழில்நுட்பத் திறன்களைத் தவிர தரவு ஆய்வாளருக்கு நல்ல தகவல்தொடர்புத் திறன் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களுடன் பணியாற்றி தரவுகளைப் பயனுள்ள தகவல்களாக புரிந்துகொள்ள உதவுவதாகவும் கூறினார். தரவு பகுப்பாய்வு பெரும்பாலான துறைகளுக்குப் பொருந்தும் என்பதால் இத்துறையில் ஆற்றலை வளர்த்துக்கொள்வது நன்மை தரும் என்று பங்கேற்பாளர்களிடம் அவர் விளக்கினார்.
“வேலை அனுபவ வாய்ப்புகளோ பயிற்சி வாய்ப்புகளோ கிடைத்தால் ஏற்றுக்கொள்வது நல்லது என்பதை தெரிந்துகொண்டேன். இது போன்ற வாய்ப்புகளின் வழி பல்வேறு தொழில் பாதைகளை ஆராய்ந்து, அவற்றில் அனுபவம் பெற்று, ஏற்ற தொழிலைத் தேர்வு செய்யலாம்,” என்று கூறினார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவி விஷ்வாலா.