கொவிட்-19 கிருமிப்பரவலால் வீட்டிலேயே வேலை பார்க்கும் பெற்றோரும் தாத்தா பாட்டியரும் அதிக நேரம் நாற்காலியில் அமர வேண்டி இருப்பதால் அவர்களுக்கு முதுகுவலி பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதை சில மாணவர்கள் கவனித்தனர்.
பெரியவர்கள் மீதான தங்களது அக்கறையையும் அன்பையும் செயலில் காட்டி அவர்கள் ஆரோக்கியமான முறையில் அமர உதவும் சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்த மாணவர் குழு ஒன்று இதற்காக பரிசும் பெற்றுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ‘எஸ்எஸ்டி-3எம்’ போட்டியின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த இந்தக் குழு, 55 மாணவ அணிகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பெற்றது.
முதல் பரிசு பெற்ற ‘ஜெனோம்’ என்ற சாதனம், நாற்காலியின் முதுகு சாயும் பகுதியில் பொருத்தப்படுகிறது. இந்தச் சாதனம் அதிர்வலைகளை எழுப்பி உட்காருபவர் வளையாமல் முதுகு நிமிர்ந்து அமரும்படி அறிவுறுத்தும்.
கண்டுபிடிப்பை உருவாக்குவதற்கு முன்னர் தமது குழுவினர் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் ஒரு முடிவை எடுக்க வேண்டி இருந்ததாக நேத்தன் சூன் லிரன் தெரிவித்தார்.
பரிசு பெற்ற மற்றொரு குழு, ‘ஏர்கார்ன் மென்’ என்ற சாதனத்தை உருவாக்கியது. இது மின்சாரத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கருவியாக உள்ளது.
தென்கிழக்காசியாவிலேயே ஆக அதிகமாக குளிர்சாதனங்களைப் பயன்படுத்துகிறது சிங்கப்பூர். அதனால் தங்களது கண்டுபிடிப்புக்கான தேவை இங்கு நிச்சயம் இருக்கும் என்று இந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
“இந்தப் போட்டியில் கலந்துகொண்டது நல்ல அனுபவமாக இருந்தது” என்று இந்தக் குழுவில் இடம்பெற்ற 13 வயது லக்ஷ் மாதவன் தெரிவித்தார்.