ஜிசிஇ ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதனும் ஒருவர். உயர்நிலை ஒன்றிலிருந்தே குடும்பச் சூழ்நிலையால் இவருக்குப் படிப்பில் பலமுறை கவனம் சிதறியது. அத்துடன், கடந்த ஆண்டு இணையம் வழி கற்றலை மேற்கொள்வதும் மிகக் கடினமாக இருந்தது.
ராஜா நான்கு வயதாக இருந்தபோது, அவரது தாயார் மனநல நோயால் அவதியுற்றார். தந்தை இரவுநேர வேலை செய்ய வேண்டியிருந்தது. இதனால் ராஜா, சென் சு லான் மெத்தடிஸ்ட் சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார். கடந்த ஆண்டு இல்லத்தில் இருந்தவாறே இணையம் வழி பாடம் கற்றது ராஜாவுக்குப் பெரும் சவாலாக இருந்தது. படிப்பதற்குத் தகுந்த சூழல் இல்லாதபோதும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற உந்துதலுடன் தொடர்ந்து கடினமாக உழைத்தார். ஆங்கில மொழித் தேர்வில் எதிர்பார்த்த அளவிற்கு மிகச் சிறப்பாக செய்யாவிட்டாலும் பிற பாடங்களில் நல்ல தேர்ச்சி பெற்றது தனக்கு மனநிறைவை அளிப்பதாக கூறிய ராஜா, இப்போது பலதுறைத் தொழிற்கல்லூரியில் சமூக மேம்பாட்டு துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே தனக்குப் பக்கபலமாக இருந்து ஆதரவு தந்த தன்னுடைய சமூக சேவகரைப் போல் தானும் எதிர்காலத்தில் தன்னைப் போன்ற சூழ்நிலையில் சிக்கி உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.
பல வருடங்களாக பிறரிடம் பேசுவதற்குக்கூட பயமும் தயக்கமும் கொண்டிருந்தார் இவர். ஆனால், தன்னைப் போன்ற குடும்பப் பின்னணி கொண்ட நண்பர்களிடம் பேசி, தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து, அவர்களின் பள்ளி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
பொதுவாக தமிழ்மொழி பாடத்தில் சிரமத்தை எதிர்நோக்கும் இவர், ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தோடு சாதாரண நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இது தனக்கு அதிகளவு மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்தார்.
“நான் ஓர் பராமரிப்பு இல்லச் சூழலில் இருந்தவாறு பாடம் கற்றபோதுகூட என்னுடைய ஆசிரியர்கள் என்னைத் தொடர்புகொண்டு நலம் விசாரிப்பார்கள். நான் தனிமையில் இருப்பதுபோல் ஒரு பொழுதும் உணரவில்லை. இது என் கல்விப் பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமைதியான சுபாவம் கொண்ட நான், பிறரிடம் தைரியமாகப் பேசத் தொடங்கியதற்கு இணைப்பாட நடவடிக்கைகளில் எனது ஈடுபாடு, மிகப் பெரிய பங்கு வகித்தது. இதே உத்வேகத்துடன் பலதுறை தொழிற்கல்லூரியில் நன்றாக படித்து சமூகத்திற்குப் பங்காற்றும் சமூக சேவகன் ஆவேன்,” என்றார் ராஜா.
ஐந்து அல்லது அதற்கு அதிகமான பாடங்களில் 85.4% தேர்ச்சி விகிதம்
கொவிட்-19 கொள்ளைநோய்ச் சூழலிலும் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020ஆம் ஆண்டில் சாதாரண நிலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐந்து அல்லது அதற்கும் அதிகமான பாடங்களில் 85.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
முடக்கநிலை, பள்ளி மூடல் போன்றவற்றைக் கடந்துவந்து தங்களிடம் மீள்திறன் உண்டு என்று நிரூபிக்கும் வகையில் இந்த தேசிய நிலைத் தேர்வில் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். கொவிட்-19 சூழல் கருதி, தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அவரவர் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தபடி, பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.