பொதுவாக ஒரு மேடை நாடகம் என்று எடுத்துக்கொண்டால், நாடக வசனங்களை எழுதும் கதாசிரியர், கதாசிரியர் எழுதும் வசனங்களுக்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள், நாடகத்துக்கு மெருகூட்டும் ஒலி, ஒளி வடிவமைப்பாளர், படைப்பின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் இயக்குனர் என பலரின் உழைப்பு அதில் அடங்கி இருக்கும்.
இப்படி ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்ற தேவைப்படும் திறன்களைக் கற்று, மேடை நாடகம் மீதான ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள புத்தாக்கமிக்க ஒரு வாய்ப்பை ஐந்து இளையர்களுக்கு வழங்கியது ‘அகம்’ மேடைநாடக அமைப்பு.
‘இஸம்ஸ்’ என்ற இந்தத் தயாரிப்பு, ஐந்து இளையர்களை முதல்முறையாக நாடகத் துறையில் ஈடுபடுத்தி, அவர்களின் படைப்புகளை மேடையேற்றும் வாய்ப்பையும் வழங்கியது.
இவர்களின் படைப்புகள் கடந்த மாதம் 18 முதல் 20ஆம் தேதி வரை ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் மேடையேற்றப்பட்டன.
இவர்களது படைப்புகள் அரங்கேற்றப்படுவதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை இவர்கள் மேற்கொண்ட மேடை நாடகக் கற்றல் பயணமே இந்தத் தயாரிப்பின் சிறப்பம்சம்.
சிங்கப்பூரில் மேடை நாடகங்களைத் தயாரித்து படைக்கும் பல குழுக்களும் பள்ளிகளும் உள்ளன. ஆனால் நாடகத்துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும் ஆர்வம் இருந்தால் போதும். இளைஞர்கள் சுயமாக வசனங்கள் எழுதி, இயக்கி, மேடைக்கு ஒளி வடிவமைத்து அவர்களை நடிக்கவும் வைக்க வழி வகுத்துள்ளது ‘இஸம்ஸ்’.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதிய பிரபல சிங்கப்பூர் மேடை நாடக எழுத்தாளரும் கலாசாரப் பதக்கம் பெற்றவருமான திரு ஹரேஷ் ஷர்மா, மேடை நாடகத்தில் 20 ஆண்டுகால அனுபவம் பெற்ற இயக்குநர் திரு நூர் அஃபெண்டி இப்ராஹிம் போன்ற ஆறு மேடை நாடக வல்லுநர்களின் வழிகாட்டுதலின்கீழ் மேடை நாடகத் தயாரிப்பின் நுணுக்கங்களை இளையர்கள் கற்றனர்.
‘இஸம்ஸ்’ என்றால் ஆங்கில வார்த்தைகளுக்கு பின் சேர்க்கப்படும் ஒரு பின்னொட்டு. இது பொதுவாக சில கருத்துகளின் தொகுப்புகள், நம்பிக்கை போன்றவற்றை குறிக்கப் பயன்படுகிறது.
சுய நியதி, தோல் நிறத்தால் பாகுபாடு, பெண்ணியம் போன்ற தலைப்புகளில் ஐந்து இளையர்களும் தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் அல்லது உறுத்தும் ஒரு சமூகப் பிரச்சினையைத் தேர்வுசெய்து 10 நிமிட நாடகப் படைப்பை அரங்கேற்றினர்.
இளையர்கள் மேடையில் வெளிப்படுத்திய உணர்வுகளும் நாடகம் மீதான அவர்களின் வேட்கையும் தயாரிப்பின் குறைபாடுகளை மறைத்தது.
மேலோட்டமான நடிப்பு, ஆழமில்லா கதைக் கரு என சில பார்வையாளர்கள் குறைகூறினாலும் படைப்புகளின் நிறைகளைச் சீர் தூக்கிப் பார்த்து, வளர்ந்துவரும் இந்தப் புதிய நாடகவாதிகளைப் பாராட்டியவர்கள் பலர்.
“கலைஞர்களின் படைப்புகள் முழுக்க முழுக்க அவர்களின் எழுத்து. படைப்பாற்றல் திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதில் அகம் குழு உறுதியாக இருந்தது.
“இளையர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினாலும் இறுதியில் அவர்களது படைப்புகள் அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.
“கிருமித்தொற்று காலத்தில் அனைவரும் நேரடியாக சந்திக்க முடியாததால் இணையம்வழி எழுத்துப் பயிலரங்கில் இருந்து தொடங்கியது ‘இஸம்ஸ்’. இந்தப் பயணத்தில் பல சவால்கள் இருந்தாலும் பங்கேற்றவர்களின் உற்சாகமும் ஆர்வமும் புத்துணர்ச்சியைத் தந்தன,” என்று ‘இஸம்ஸ்’ தயாரிப்பாளர் திரு பொன்குமரன் செல்வம் கூறினார்.
இளையர்களுக்கு வழங்கப்பட்ட “Dramaturgy” என்று அழைக்கப்படும் நாடகவியல் துறையைப் பற்றிய பயிற்சி, ‘இஸம்ஸ்’ தயாரிப்பில் புதுமையான அம்சம்.
ஆங்கில மேடை நாடகத் துறையில் இது ஒரு முக்கியமான பகுதி. நாடக பயிற்சிகளின்போதும் ஒத்திகைகளின்போதும் இருந்து படைப்பின் பல அம்சங்களை ஆராய்ந்து அவற்றின் குறைகளைச் சுட்டிக்காட்டி, மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் வழங்கும் ஒரு பணி இது.
கலைஞர்களுக்கு இதை அறிமுகப்படுத்தி அவர்களின் மேடை நாடகத் திறனை பெருக்கி உள்ளது ‘அகம்’.