ஸ்காட்லாந்தில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ‘டிஷும்’ (Dishoom) என்ற இந்திய உணவகத்தைப் பற்றி அறிய வந்து, அங்கு வாடிக்கையாளராகச் சென்றார் மனோஜ் குமார். அது அவருக்குப் புதுவித அனுபவமாக அமைந்தது.
“இந்திய உணவை எப்படி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப படைப்பது, இந்திய உணவை மற்ற இனத்தவர் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் போன்றவற்றைப் பற்றி தெரிந்துகொண்டேன். இதுபோன்ற ஓர் இந்திய உணவகத்தை சிங்கப்பூரில் திறக்க அதுவே என்னைத் தூண்டியது,” எனக் கூறினார் 27 வயது மனோஜ் குமார் அன்பழகன்.
அவர் 2019ஆம் ஆண்டு டக்ஸ்டன் ஹில் பகுதியில் தம்பி ரிஷி குமார், உறவினர் டிலிப் குமார் ஆகியோருடன் இணைந்து ‘கிச்சன்குமார்ஸ்’ உணவகத்தைத் தொடங்கினார். இங்கு மேற்கத்திய, இந்திய கலவையில் உணவுவகைகள் விற்கப்படுகின்றன.
தொடக்கத்தில் சிக்கல்...
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில்தான் வியாபாரம் சூடுபிடிக்கவே ஆரம்பித்தது. ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்று வந்து, வியாபாரத்தை அடிமட்டத்திற்குத் தள்ளியது. நாட்டில் கிருமி முறியடிப்புத் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடப்புக்கு வந்தபோது, உணவகங்களிலிருந்து உணவை வாங்கிச் செல்லவும் விநியோகச் சேவை வழி உணவைப் பெற்றுக்கொள்ளவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
மாற்றம் தேவைப்பட்டது...
பெரும்பாலும் கடையில் அமர்ந்து உணவு உண்ணும் வாடிக்கையாளர்களையே உணவக வியாபாரம் நம்பியிருந்ததால் உடனடியாக செயல்முறைகளில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.
இணையத் தளத்தில் உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், நிச்சயமற்ற சூழலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஊழியர்கள் சிலரை ஒருசில வாரங்களுக்குக் கட்டாய விடுப்பு எடுக்கச் சொல்வது, உணவு விநியோகத்திற்கு ஊழியர்களைத் தேடுவது, வாடகையைச் சமாளிப்பது என ஒரே நேரத்தில் பல அம்சங்களில் கவனம் தேவைப்பட்டது.
மோட்டர்சைக்கிள்களில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு, வாடிக்கையாளர்களைச் சென்றடையும்போது கவிழ்ந்துவிடுவதால் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ டாக்சியின் உணவு விநியோகச் சேவையை அவர்கள் நாடினர்.
உணவுத் தரத்தை நிலைநாட்ட, பிரியாணி போன்று எந்த உணவு வகையை நீண்ட நேரத்திற்குக் கெடாமல் வைத்திருக்க முடியுமோ, அந்த உணவுவகைகள் மட்டுமே இணைய உணவு விநியோகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
விடாமுயற்சி, மீள்திறன்...
சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துவதில் செல்வாக்கு மிக்கவர்கள் அதாவது ‘இன்ஃப்லுவன்சர்ஸ்’ (influencers) வழி தங்களின் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் உத்தி, உணவகத்துக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
“இந்த உத்தியைப் பயன்படுத்தியதில் அன்னையர் தினத்தை முன்னிட்டு எங்களுக்குச் சமாளிக்க முடியாத அளவுக்கு ‘ஆர்டர்’கள் வந்து குவிந்தன. விடாமுயற்சி, மீள்திறன் இவ்விரண்டுடனும் செயல்பட்டதில் நல்ல பலன் கிட்டியது,” என்று தெரிவித்தார் உரிமையாளர்களில் ஒருவரான டிலிப் குமார், 31.
அரசாங்க ஆதரவுத் திட்டங்கள்...
அதோடு உணவு பானத் துறைக்கான அரசாங்க ஆதரவுத் திட்டங்களையும் இவர்கள் பயன்படுத்தினர்.
முதல்கட்டத் தளர்விலிருந்து இன்று வரையில் வியாபாரம் படிப்படியாக மேம்பட்டு வருகிறது.
தொழில்நுட்பப் பயன்பாடு, துரிதமாகச் செயல்முறைகளை மாற்றியமைக்கும் தன்மை ஆகியவை வியாபாரத்தின் நிலைத்தன்மையை உறுதிசெய்துள்ளது. உதாரணத்திற்கு, அரசாங்கத்தின் மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகைக்கு (Digital Resilience Bonus) தகுதிபெற ஐசெஃப் (iCHEF) நிறுவனத்தின் மின்வர்த்தகச் செயல்முறையை (Point-of-Sales System) அமல்படுத்தினர்.
எந்த நேரத்தில் வியாபாரம் உச்சத்தை எட்டும், எந்த நேரத்தில் மந்தமாக இருக்கும் என்பன போன்ற முக்கியத் தகவல்களை இதன் வழி சேகரிக்க முடியும்.
இதனால், உணவகத்தை எந்தெந்த நேரங்களில் திறந்து வைத்தால் வியாபாரத்திற்குச் சாதகமாக இருக்கும் என்பது போன்ற முடிவுகளை இவர்களால் எடுக்க முடிகிறது. செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக ‘கியூஆர்’ குறியீட்டைத் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்து உணவுப் பட்டியலைப் பார்வையிடும் முறையை இவர்கள் தற்போது பயன்படுத்துகின்றனர்.
“வியாபாரத்தில் மெல்ல மெல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது. கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம் மிதமானதும் வியாபரத்தை விரிவுப்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தக, சமூக நிறுவனத் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் ரிஷி குமார், 20.