உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எழுத்துத் திறனையும் திருத்துதல் திறனையும் மேம்படுத்துவதற்கான பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி.
தமிழ் முரசு செய்தியாளரை அந்தப் பயிலரங்கின் சிறப்புப் பேச்சாளராக அழைத்து மாணவர்களுக்கு நேரடி அனுபவங்களைக் கொண்டு சேர்த்தனர் பள்ளி ஆசிரியர்கள்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை வளர்க்கவும் அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தவும் மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி கடந்த ஈராண்டுகளாக மின்னிதழைத் தயாரித்து வருகிறது.
அந்த மின்னிதழில் மாணவர்கள் மேலும் சிறப்பாக எழுதவும் படைப்புகளைச் சீரிய முறையில் திருத்தி வெளியிடவும் நோக்கம் கொண்டது அந்தப் பள்ளி.
செய்தியாளர்களின் தினசரி பணிகளைப் பற்றியும் அவர்கள் கற்ற பாடங்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்தப் பயிலரங்கு.
சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழ் ஆற்றி வரும் சமூக, இலக்கியப் பணிகளைப் பற்றி மாணவர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்து இருந்தனர்.
தமிழ் முரசை நிறுவிய தமிழவேள் கோ சாரங்கபாணி குறித்தும் தமிழ் முரசின் வரலாறும் அனைத்து மாணவர்களுக்கும் அத்துப்படி.
மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி உயர்தமிழ் பாடத்தை வழங்கும் தமிழ்மொழி நிலையமாகவும் விளங்குகிறது.
கடந்த மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் ஏறத்தாழ 15 பள்ளிகளில் உயர்நிலை 1, 2 வகுப்புகளில் பயிலும் கிட்டத்தட்ட 50 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பயிலரங்கை மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி தாய்மொழித் துறை தலைவர் திருவாட்டி ரஷிடா தொடங்கிவைத்தார்.
பாடத் தலைவர் திரு கோவிந்தராஜலு கிருஷ்ணமூர்த்தி, தமிழ்மொழி ஆசிரியர்கள் டாக்டர் ஆண்டாள், திருமதி ராஜகுமாரி தங்கராஜ், திருமதி சுமதி திருமாறன் ஆகியோர் இணைந்து இந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அரையாண்டுக்கு ஒருமுறை வெளியீடு காணும் ‘மார்சிலிங் முரசு’ மின்னிதழில் மாணவர்களின் வெவ்வேறு படைப்புகள் சேகரிக்கப்பட்டு தொகுத்து வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வகுப்பறையிலும் அதையும் தாண்டி தமிழ்மொழியைக் கொண்டுசேர்க்கும் பல முயற்சிகளில் ஒன்றாக ‘மகிழ்வூட்டும் கற்றல்’ என்ற திட்டத்தின்கீழ் இந்த ‘மார்சிலிங் முரசு’ மின்னிதழை மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி தயாரித்து வருகிறது.
கதை, கட்டுரை, கவிதை, நடப்பு விவகாரம், விடுகதைகள், ஓவியம், நேர்காணல்கள், புகைப்படத் தொகுப்பு, நூல் ஆய்வு எனப் பல வகையான மாணவர் படைப்புகள் இந்த மின்னிதழில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
“சில மாணவர்களுக்கு எழுதுவது இயல்பாக வரும். ஆனால் வேறு சிலரால் தமிழ்மொழியில் கதையோ கவிதையோ எழுதுவது சவாலாக இருக்கும். அவர்களுக்குப் படிப்படியாக ஊக்கம் கொடுக்கும் வண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அல்லது அவர்களுக்கு மிகுந்த திறன் இருக்கும் ஓவியம் தீட்டுவது போன்ற வேறு அம்சங்களில் அவர்களின் படைப்பை இந்த மின்னிதழில் இணைப்போம்.
“அவர்களும் பங்களிக்க முடியும் என்ற ஆர்வத்தில் மொழியுடனான தொடர்பை அவர்கள் தொடர்ந்து பேணுவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறோம்,” என்றார் மார்சிலிங் உயர்நிலைப் பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் கற்பிக்கும் திருமதி சுமதி திருமாறன்.
“செய்தி எழுதுவது எப்படி என்றும் கதை, கட்டுரையோடு ஒப்பிட்டு இதன் வித்தியாசத்தை அறிந்து எழுதும் நம்பிக்கை கிடைத்துள்ளது,” என்று கூறினார் மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆராதனா ரமேஷ்.
“இன்னும் கூடுதல் நேரம் இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டால் எங்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். நேரம் போனதே தெரியவில்லை,” என்றார் உயர்நிலை 2ல் பயிலும் ஜவஹர் அஷ்விதா.
“பயிலரங்கின்போது குழுக்களாகப் பிரித்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள் செய்திக்குத் தலைப்பை உருவாக்க வைத்தது எங்களுக்குத் தொடக்கத்தில் சவாலாகத் தெரிந்தது. ஆனால் அதை முடித்தவுடன் நம்பிக்கை மேலும் வலுவானது,” என்றார் சுரேஷ்குமார் சரவணராம்குமார்.
மாணவர்கள் தொடர்ந்து தங்களின் திறன்களை வளர்த்து கூடிய விரைவில் தமிழ் முரசின் இளையர் முரசு பக்கத்திற்குத் தங்கள் படைப்புகளை வழங்குவதில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.