இந்து இளங்கோவன்
அரக்கர் குல அழகி சூர்ப்பனகை, சீதையை தன்வசம் ஈர்த்த அழகிய பொன் மான் மாரீசன், ராவணனை எதிர்த்துப் போரிட்ட வீரக் கழுகு ஜடாயு, கணவனை இழந்து
பரிதவிக்கும் மண்டோதரி.
இவர்களே ‘நாடி’ என்னும் நாட்டிய நாடகப் படைப்பில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள்.
போர்க்களத்தில் காயமுற்று, தமது மனைவி மண்டோதரியின் மடியில் கிடக்கும் ராவணனின் பார்வையில் ராமாயணத்தின் சுவாரசியமான தருணங்களை நாட்டிய நாடக பாணியில் நினைவுகூர்ந்தது சிங்கப்பூர் இளம் கலைஞர்களை மையமாக கொண்ட ‘தத்வா’ என்னும் கலைக் குழு.
‘நாடி’ என அழைக்கப்படும் இப்படைப்பு, இவ்வாண்டு தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்றது.
ராவணனின் இறுதித் தருணங்களில் ‘நாடி’ துடிப்பாக துடிக்கும் அவரது நினைவுகளை கலை
ரசனையுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காணொளி வடிவில் ஃபேஸ்புக்கில் வெளியிட்டது தத்வா.
ராமாயணத்தில், ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றோரு கதாபாத்திரத்தை ‘நாடி’ச் செல்வது முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்துவதாலும் இப்படைப்புக்கு ‘நாடி’ என்ற பெயர் வந்ததாக கூறினார் தத்வாவின் கலை இயக்குனர் திரு லோகேந்திரா.
பத்து இளம் பரதநாட்டிய கலைஞர்கள் படைத்த ஒவ்வொரு நடன, நாடக காட்சிக்கு முன்பும், தோல் பவாய் கூத்து, வாயாங் குலிட் ஆகியவற்றை தழுவிய நிழல் பொம்மலாட்ட காட்சி அறிமுகமும் இதில் இடம்பெற்றது.
“கலை உலகில் கதை சொல்வது என்பது ஒரு முக்கியமான அம்சம். ஒரு கதையை பல வகைகளில், பல கதாபாத்திரங்களின் கண்ணோட்டங்களில் சொல்லலாம்.
“ஒரு கதையைப் பல்வேறு கோணங்களில் படைத்தாலும் அதன் உண்மையான சாரத்தை இழக்காமல் அதை கலைநயத்துடன் படைப்பது மிகவும் சுவாரசியமான அனுபவம்.
“இதைத்தான் நாங்கள் ‘நாடி’யில் புகுத்த முயற்சி செய்துள்ளோம். தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு இந்த நடன நாடகத்தைத் தமிழில் படைத்தது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதுகிறோம்.
“இந்த நாட்டிய நாடகத்தை இதற்கு முன்னால் நாங்கள் ஆங்கிலத்தில் படைத்துள்ளோம். ஆனால் இந்த நடன நாடகத்தை தமிழில் மேடையேற்றியபோது
தமிழ்ச் சொற்களுக்கு இருக்கும் ஆழமும் அழுத்தமும் எங்களது இப்படைப்பை மேலும் மெருகூட்டியது.” என்றார் திரு லோகேந்திரா.