மேல்நிலைத் தேர்வுகளை முடித்திருந்த ஸ்டாலின் முத்துக்குமார் பில் கிரண்குமார், தேசிய சேவை புரியத் தொடங்கிய காலகட்டத்தில் நிரலிடுதலில் (programming) ஈடுபட்டார். தனக்கு நிரலிடுதல் பிடித்திருந்ததாகக் கூறிய பில், அதில் மேலும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற இலக்கை வகுத்துக்கொண்டார்.
தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினித் தொழில்நுட்பத் துறையில் இவர் பயின்று வருகிறார்.
சிங்கப்பூர் மின்னிலக்க உருமாற்றத்திற்குப் பங்காற்ற ஆர்வமுள்ள மாணவர்களுக்குக் கைகொடுக்கும் ‘அறிவார்ந்த தேச உபகாரச் சம்பளம்’, இவ்வாண்டு 14 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் பில்லும் அடங்குவார்.
தலைமைத்துவப் பண்புகள், ஏட்டுக்கல்வித் திறன் ஆகியவற்றைக் கடந்து தங்களது திறனை வெளிப்படுத்தித் தனித்தன்மையைக் காட்டும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏறத்தாழ 589 மாணவர்கள் இந்த விருதுக்காக கடுமையான பயிற்சிகள், நேர்முகத் தேர்வுகள் போன்றவற்றின் மூலம் போட்டியிட்டனர்.
தேசிய சேவையில் பயோனிக்ஸ் கவச வாகனத்தின் தளபத்திய அதிகாரியாக உள்ள பில், தமது தொழில்நுட்ப ஆர்வத்தை தேசிய சேவை வெகுவாகத் தூண்டியதாகத் தெரிவித்தார்.
‘பயோனிக்ஸ்’ கவச வாகனத்தில் பணிபுரிவோர் எதிர்நோக்கும் அபாயத்தைத் தொழில்நுட்பம் வெகுவாகக் குறைக்க முடியும் என்று அறிந்த பில், அந்த வாகனத்தின் அடுத்த வடிவமான ‘ஹன்ட்டர்’ வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டார்.
ஆசிரியர் அல்லது பயிற்றுவிப்பாளர் என எந்தவொரு வழிகாட்டு தலின்றி இவர் சுயமாகவே நிரலிடு தலைத் தொடர்ந்து இணையப்பக்கங்களின் மூலமாகவும் யூடியூப் காணொளிகள் மூலமாகவும் கற்று வந்தார்.
தன்னைப் போலவே நிரலிடுதலின்மீது ஆர்வம் கொண்டுள்ள சிலருடன் இணைந்து கற்றது தனக்கு உற்சாகத்தைத் தந்ததாகத் தெரிவித்தார்.
தேசிய சேவையில் நிபுணர் பயிற்சி எடுத்துவந்ததால் இதனைக் கற்பதற்கான நேரம் குறைவாக இருந்தாலும் நிரலிடுதலைச் சரியாகக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியுடன் இருந்த பில், நேரத்தை முடிந்தவரை நிர்வகித்து வந்ததாகக் கூறினார்.
“நிரலிடுதலைப் பழகுவது மட்டுமின்றி அந்தத் துறையைப் பற்றிய புத்தகங்களை நன்கு படித்தேன். இந்தத் துறையில் இருப்பவர்களிடம் பேசினேன். என் ஆர்வம் மேலும் வளர்ந்தது,” என்று பில் கூறினார்.
உபகாரச் சம்பள விருது கிடைத்தது தன்னை நெகிழ வைத்திருப்பதாக இந்த இளையர் கூறுகிறார்.
“இது எனக்குக் கிடைத்துள்ளதை ஒரு வரமாகக் கருதுகிறேன். அறிவார்ந்த தேசத் திட்டத்தின் வழி இந்நாட்டு மக்களின் வாழ்க்கையின்மீது நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறேன்,” என்றார்.
பிரின்செஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளி, செயிண்ட் ஜோசஃப் உயர்நிலைப் பள்ளி, ராஃபிள்ஸ் கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்ற பில், தன்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் நல்லாசிகளே தன் வெற்றிக்குக் காரணம் என்றார். அவர்கள் என்றென்றும் ஆதரவாக இருந்ததால் தனக்குள் உற்சாகம் தொடர்ந்து இருந்ததாகவும் தெரிவித்தார்.
சமூக சேவை புரிவதிலும் ஈடுபாடு கொண்டுள்ள பில், தன் அனுபவங்கள் அனைத்துமே தன்னை நிதானமான ஒரு மனிதராக மாற்றி இருப்பதாகக் கூறினார்.
“தனிமரம் தோப்பாகாது என்பதற்கு ஏற்ப என் வெற்றியில் அன்பு உள்ளங்கள் பலரின் பங்களிப்பு உள்ளது,” என்று கூறினார் இந்த இளையர்.