செவிகளுக்குத் தேனிசை, கண்களுக்கு விருந்து, மனதுக்கு இதம் எனப் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்த நடனப் படைப்பாக பிரம்மாஸ்த்ராவின் ‘என் அடையாளம்’ அமைந்தது.
ஐந்து இளையர்களின் தனித்துவத்துவத்தைப் பிரதிபலிப்பதாக நிகழ்ச்சி அமைந்தது.
இந்த ஐவரும் தங்கள் திறமைகளைக் கண்டறியும் பயணங்களைக் காட்டும் நடனங்களும் படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வில்வம் ராமு, தர்ஷன் குணசேகரன், வசந்தகுமார் அன்பழகன், பவித்திரன் கனகரத்தினம், ரபெக்கா சங்கீதா துரை ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
இசைக் கருவிகளை வாசிப்பதிலும் இசையமைப்பதிலும் திறன் படைத்த பவித்திரன், இளையர்களுக்கு இசை கற்பித்து வருகிறார். இப்படைப்பில் அவரின் ஆற்றலையும் இசையார்வத்தையும் அவர் மிருதங்கம் வாசிக்கும் விதத்தில் பார்வையாளர்கள் உணர்ந்தனர்.
தனிமையிலிருந்து விடுபட தர்ஷன் குணசேகரன் தமிழ் நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்க்கத் தொடங்கினார்.
அவற்றில் கதைசொல்லும் பாணியைக் கவனித்த தர்ஷன், கதைசொல்வதில் எத்தனையோ அம்சங்கள் உள்ளன என்றும் அப்பணியைத் திறமையாகக் கையாளப் பல உத்திகள் உண்டு என்றும் உணர்ந்தார். அவ்வாறே காணொளித் தொகுப்பாக்கம் குறித்தும் ஊடகத் துறையின் பின்னணியில் நடப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார்.
‘என் அடையாளம்’ படைப்பில் இசைக்கருவிகளை வாசித்த இளையர்கள் தங்களின் இசையால் மக்களின் உணர்வுகளைத் தூண்டினர். ‘இண்டோ-ஜேஸ்’ இசையை நிரஞ்சன் பாண்டியன் மற்றும் அவரின் குழுவினர் வழங்கினர்.
இந்திய பாரம்பரியம் கலந்த அவர்களின் நவீன இசைக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
மேலும், நிகழ்ச்சியில் சமகால (Contemporary) நடன பாணியுடன் பரதநாட்டியத்தை இணைத்து ஆடியிருந்தனர் ஐவர்.
நடனத்தின் வழி ஒவ்வொரு கலைஞரின் கதையை அவர்கள் வெளிப்படுத்தினர்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இசைக்கு ஒரே மாதத்தில் நடனம் அமைத்ததுடன் தீவிரமாகப் பயிற்சி செய்ததாகவும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
நடனக் கலைஞர்களில் ஒருவரான சம்யுக்தா, “கலை மூலம் நாம் நமது அடையாளத்தை எவ்வாறு செதுக்குகிறோம் என்பதைக் காட்டியுள்ளோம்.
“நாங்களும் எங்கள் பாதைகளில் மேடு பள்ளம் பலவற்றை அனுபவித்துள்ளதால் மற்றக் கலைஞர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்த சவால்களை எங்களால் புரிந்துகொண்டு அவற்றை நடனத்தின் மூலம் வெளிப்படுத்த முடிந்தது,” என்றார்.
‘என் அடையாளம்’ நிகழ்ச்சியை மேடையேற்றிய பிரம்மாஸ்த்ராவின் நிரஞ்சன் பாண்டியன், “நான் சிறுவயதில் என் இசை ஆர்வத்தை மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை,” என்றார்.
‘என் அடையாளம்’ நிகழ்ச்சிவழி திறமைவாய்ந்த இளையர்களைத் தாங்கள் கொண்டாடியதாக இவர் கூறுகிறார்.