ஸாக் சலாம் இந்தியா நிகழ்ச்சியின் இறுதி நாளில் நடைபெற்றது புருடென்ஷியல், ‘எஸ்கேசி’ நெய் ஏற்பாடு செய்த சுவையான சமையல் போட்டி.
பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து 45 நிமிடங்களில் தங்கள் சமையல் திறனை வெளிப்படுத்தினர்.
போட்டியின் முக்கிய விதிமுறை, அடுப்பே இல்லாமல் சமைக்க வேண்டும். அதாவது, சாலட் (Salad) போன்ற உணவுகளைச் செய்யலாம்.
பங்கேற்ற பிள்ளைகள் பலரும் இதற்கு முன்பே வீட்டில் தம் தாயாருக்குச் சமையலறைகளில் உதவியதாகக் கூறினர்.
முதல் பரிசை வென்ற திருவாட்டி ஓவியாவின் மகள் திஷாரா, 7, தாயாருக்குப் பழங்கள், காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தார். “நான் இதன்வழி சாலட் செய்யக் கற்றுக்கொண்டேன். எப்படி வெள்ளரிக்காய், தக்காளியை சமையலில் சேர்ப்பது எனத் தெரிந்துகொண்டேன்,” என்றார் திஷாரா. மேலும், தேங்காய், டிராகன் பழம், போன்றவை சேர்த்த இனிப்புப் பலகாரத்தையும் அவர்கள் செய்தனர்.
திஷாராவின் தோழி மெளனிகா, 9, “பழங்களை நன்றாக மசிக்கவும், எவ்வளவு மிளகு போட வேண்டும், வெவ்வேறு சமையல்களைச் செய்யவும் கற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் நான் சொந்தமாகவே சமைக்க முடியும்,” என்றார்.
“எனக்கு உணவின் நறுமணம் மிகவும் பிடிக்கும் என்பதால் அம்மாவுக்குச் சமையலறையில் உதவுவேன். எனக்கு நன்றாகத் தோசை சுடத் தெரியும். அம்மா செய்யும் கோழி பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார் மூன்றாம் பரிசை வென்ற கோவிக், 11.
ஓராண்டுக்குமுன் ஸாக் சலாம் சமையல் போட்டியில் வென்ற ரக்ஷணாஸ்ரீ, 11, இம்முறையும் பங்கேற்றார். அவர் மிகவும் பொறுப்பானவர் எனத் தாயார் கூறினார். “நான் வேலைக்குச் சென்றபோது, தந்தையும் வெளியூரில் இருந்தபோது ஒன்றரை மாதங்கள் தன் தம்பிக்காக அவர் தோசை சுட்டுக் கொடுத்தார்,” என மகளைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் தாயார். “மிகவும் நல்ல அனுபவமாக இது இருந்தது. நாங்கள் இம்முறை சியா விதைகளுடன் மாம்பழ புட்டிங் செய்தோம்,” என்றார் ரக்ஷணாஸ்ரீ.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து வயது நிரஞ்சன் யாரிஷ் தன் தாயாருக்காக வெள்ளரிக்காய், மாதுளம் பழம் ஆகியவற்றின் தோலை உரித்துக் கொடுத்தார்.
இரண்டாம் நிலையில் வந்த 7 வயது ஷோர்யா, பேக்கிங்கில் (baking) நாட்டம் கொண்டவர். அவர் தாயாருக்கு ‘மிக்சி’யில் காய்கறிகளை அரைத்துக் கொடுத்துச் சுவையான இனிப்புப் பலகாரம் தயாரிக்க உதவினார். 20 நிமிடம் தாமதமாகத் தொடங்கிய அவர்கள் 25 நிமிடங்களில் சமைத்தனர். ஷோர்யாவின் தந்தையும் சமையலில் உதவினார்.
அழகான படைப்போடு சுவையான சாலட், பானகத்தைப் படைத்த மாலதிக்கு அருகே, சமையல் நிபுணருக்கான தொப்பியை அணிந்துகொணடு ஊக்கமளித்தனர் பிள்ளைகள் ஆரவ், 8, சஹானா, 6. அவர்களும் தாயாரின் சமையலை ருசித்து மகிழ்ந்தனர்.
சுவையான சமையல் விருந்துக்கு அன்பளிப்பாக அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான மாய வித்தை அங்கமும் நடைபெற்றது.