தெருக்கூத்து ஆடிய சுட்டி மாணவர்கள்

தெருக்கூத்து ஆடிய சுட்டி மாணவர்கள்

2 mins read
தமிழ்ப் பாரம்பரிய நாடகக் கலையான தெருக்கூத்து பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு
a035b968-84ae-45e2-8562-aceeca73baa5
உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் ஜூன் 13ஆம் தேதி நடந்தேறிய மாணவர்களுக்கான தெருக்கூத்து பயிலரங்கில் இடம்பெற்ற படைப்பு. - படம்: ‘ஆட்டம்’

தெருக்கூத்து ஆடும் கலைஞர்கள், பல வண்ணங்கள் நிறைந்த கனமான, பெரிய  உடைகளை அணிந்துகொள்வார்கள். முகத்தில் கெட்டியான வண்ணங்களைப் பூசுகின்றனர்.

உணர்ச்சி பொங்கப் பாடும் பாடல்களுக்கும் பல்வேறு தாளங்களுக்கும் அவர்கள் ஆடுவார்கள்.

நீதிக் கதைகள், பக்திக் கதைகள் உள்ளிட்டவற்றை நடித்துக் காட்டி அவர்கள் மக்களுக்கு நற்பண்புகளைக் கற்பிப்பார்கள்.

தெருக்கூத்து பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை, 15 மாணவர்கள் அண்மையில் [Ϟ]பெற்றனர்.

‘ஆட்டம்’ அமைப்பின் ‘நம் மரபு’ தொடரின் வழி அதனை ஏற்பாடு செய்தது.

ஜூன் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் மாணவர்களுக்கான பயிலரங்கு நடந்தேறியது.

இந்தியாவைச் சேர்ந்த தெருக்கூத்து மன்றத் தலைவர் பழனி முருகன் பயிலரங்கை நடத்தினார்.

இறுதிப் படைப்பு ஜூன் 13ஆம் தேதி அதே சமூக மன்றத்தில் நடந்தது.

6 வயதிலிருந்து 12 வயது வரையிலான மாணவர்கள் பயிலரங்கில் துடிப்புடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.

பயிலரங்கில் பங்கேற்ற 15 மாணவர்கள்.
பயிலரங்கில் பங்கேற்ற 15 மாணவர்கள். - படம்: ‘ஆட்டம்’

மாணவர்கள் அனைவரும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மகாபாரதக் காவியத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றைப் படைத்தது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

பல புதிய திறன்களை பயிலரங்கில் கற்றதாக பங்கேற்பாளர்களில் ஒருவரான யுவபாரதி அனைத்துலகப் பள்ளி மாணவி சிவராம் ஞானம், 12, கூறினார்.

தெருக்கூத்துக் கலைஞர்.
தெருக்கூத்துக் கலைஞர். - படம்: ஆட்டம்

“ஆடிக்கொண்டே பாட கற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் அவர்.

மற்றொரு பங்கேற்பாளரான மாணவி சுதிக்-ஷா கோபி, 11, இது போன்ற பயிலரங்குகள் நண்பர்களுடன் கலந்துகொள்ள ஊக்குவிப்பதாகக் கூறினார்.

“அருகிவரும் இத்தகைய கலைகளைக் கட்டிக்காப்பது நமது கடமை. அதற்கு இளையர்கள் அதைக் கற்பது முக்கியம்,” என்று [Ϟ]கிரீன்வுட் தொடக்கப்பள்ளி மாணவியான சுதிக்-ஷா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்கள்கலைபள்ளி