கயலின் முதல்நாள் பள்ளி அனுபவம்

2 mins read
2a149165-19ef-4502-b647-e385652bdfcf
கயல் பள்ளிக்குச் செல்கிறாள். - படம்: செயற்கை நுண்ணறிவு

விடியற்காலையில் சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தது. குட்டிப் பெண் கயல் உற்சாகமாக எழுந்தாள். அவளுடைய முதல் பள்ளி நாள் இன்று! தொடக்கநிலை 1க்கு செல்ல இருக்கிறாள் கயல்.

அம்மா கயலுக்கு சீருடையை அணிவிக்கிறார்.
அம்மா கயலுக்கு சீருடையை அணிவிக்கிறார். - செயற்கை நுண்ணறிவு

அம்மா மலர் அவளுக்குப் புத்தம் புதிய பள்ளிச் சீருடையை அணிவித்து அழகு பார்த்தார். கயலுக்கு இரட்டைச் சடை பின்னி அதில் இரண்டு சிவப்பு ரிப்பன்களைக் கட்டினார். கயல் பள்ளிக்குத் தயாரானாள்.

- Made with Google AI

“என் செல்லக் கயல் எவ்வளவு அழகாக இருக்கிறாள்!” என்று பாராட்டினார் அப்பா கதிர். அவர் வாங்கித் தந்த புதிய பள்ளிப் பை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கயல் ஆசையுடன் பார்த்தாள். கயலின் இரண்டு ஜடைகளில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற ரிப்பன்கள் காற்றில் அசைந்தன.

- Made with Google AI

அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றாள் கயல். பள்ளிக் கூடத்தின் பெரிய வாசல் அவளுக்கு மலைப்பாக இருந்தது. அங்கே அவளைப் போலவே பல சிறுவர், சிறுமியர் அழுதுகொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர். திடீரென்று கயலுக்குள் ஒரு குட்டி பயம் வந்துவிட்டது. “அம்மா, நீங்களும் என்னுடன் வகுப்பிற்கு வருவீர்களா?” என்று மலரின் கையை இறுகப் பிடித்துக் கேட்டாள் கயல். “இல்லை கண்ணா, மாலை வரை நீ நண்பர்களுடன் விளையாடப் போகிறாய். நான் சரியாக மாலையில் உன்னை அழைக்க வருவேன்,” என்று அம்மா மலர் அவளைத் தேற்றினார்.

- Made with Google AI

வகுப்பறைக்குள் நுழைந்த கயல் ஆச்சரியப்பட்டாள்! சுவர்கள் முழுக்க ஆப்பிள், யானை மற்றும் மயில் போன்ற வண்ணமயமான படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆசிரியர் சாந்தி அவளை இன்முகத்துடன் வரவேற்று, ஒரு இருக்கையில் அமர வைத்தார்.

- Made with Google AI

சிறிது நேரத்தில், அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த மீனா என்ற சிறுமி, கயலிடம் ஒரு அழகான பென்சிலை நீட்டினாள். “உன் பை அழகாக இருக்கிறது, என் பெயர் மீனா,” என்று மழலைக் குரலில் சொன்னாள். அந்த ஒரு வார்த்தை கயலின் பயத்தைப் போக்கியது. இருவரும் பேசத் தொடங்கினர்.

- Made with Google AI

மாலை மணி அடித்தது. பள்ளியின் வாசலில் அம்மா மலர் நிற்பதைப் பார்த்ததும் கயல் ஓடிச் சென்று அவரைக் கட்டிக்கொண்டாள். “பள்ளி ரொம்ப நன்றாக இருந்தது அம்மா! எனக்கு மீனா என்ற புதிய தோழி கிடைத்துவிட்டாள்,” என்று சொல்லிக்கொண்டே மகிழ்ச்சியுடன் அம்மாவிற்கு முன் ஓடத்தொடங்கினாள் கயல்.

மலர் புன்னகையுடன் தன் மகளின் உற்சாகத்தைப் பார்த்துப் பூரித்துப்போனார். காலையில் இருந்த தயக்கமும் பயமும் இப்போது கயலிடம் துளியும் இல்லை. அவள் முகத்தில் தெரிந்த அந்தப் புதிய நம்பிக்கை, அவளை இன்னும் அழகாகக் காட்டியது.

“நாளைக்கும் பள்ளிக்குச் செல்வாயா?” என்று மலர் கேட்க, “நிச்சயமாக! நான் ஆசிரியரையும் நண்பர்களையும் பார்க்க வரவேண்டும்,” என்று துள்ளிக்குதித்தாள் கயல்.

அந்த அழகிய மாலை வேளையில், கயலின் பள்ளி வாழ்க்கை இனிதே தொடங்கியது. முதல் நாள் அனுபவம், அவளுக்கு ஒரு மறக்க முடியாத இனிய நினைவாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்