தொடக்கநிலை ஐந்து பயிலும் சிவகாமி, உற்சாகம் நிறைந்த மாணவி. தொண்டூழியம் போன்ற சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
குறுகிய நேரத்திற்குள் எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என நினைக்கும் சிவகாமியை அவரது பாட்டி ‘அவசரக் குடுக்கை’ என அழைப்பதுண்டு.
“அதென்ன பாட்டி அவசரக் குடுக்கை?” என்று சிவகாமி கேட்டார்.
தமிழ்ப் புத்தகங்களைப் பாட்டி அடிக்கடி படிப்பதால் பாட்டி எல்லாவற்றுக்கும் எளிதில் பதில் சொல்லி விடுவார்.
அவசரக் குடுக்கை என்பது மரபுத் தொடர்.
அவசரம் - என்றால் விரைவு, பதற்றம் என்று பொருள்
எதையும் யோசிக்காமல் பார்க்காமல், பொறுமையின்றி, பதற்றத்துடனும் செய்யும் ஒருவரைக் குறிக்க இந்தத் தொடர் பயன்படுகிறது.
குடுக்கை என்றால் ஒரு வகை ஓடு (shell). தேங்காய் போன்ற இயற்கைப் பொருள்களால் செய்யப்படும் குடுக்கை, பாத்திரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வேகமாக ஓடும்போது ஏற்படும் சத்தத்தை ‘குடுகுடு’ என விவரிப்பது வழக்கம்.
உன்னைப்போலப் போல எப்போதும், எல்லாவற்றுக்கும் அவசரப்படுபவரை அவசரக் குடுக்கை எனச் சிலர் அழைப்பார்கள் என்று பாட்டி சிரித்தபடி கூறினார்.
பாட்டி கேலி செய்தாலும் அவர் அன்பானவர் என்பதால் சிவகாமி கோபித்துக் கொள்ளவில்லை. தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிவகாமிக்குத் தோன்றியது.
“சரி பாட்டி. இதற்கு நான் என்ன செய்வது?” என சிவகாமி கேட்டார்.
சிவகாமியின் பாட்டி முன்னதாக ஆசிரியராக வேலை செய்தவர். வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க ஒரிகாமி கைவினைக் கலையில் அவர்களை ஈடுபடுத்துவார்.
“நீ ஒரிகாமி செய்து பார். நான் கற்றுத்தருகிறேன்,” என்று பாட்டி கூறினார்.
தாள்களைப் பல்வேறு பக்கங்களாக மடித்துப் பறவை, விமானம், மலர், விண்மீன் போன்ற வடிவங்களை உருவாக்கச் சிவகாமி பழகிக்கொண்டார்.
அவசரப்படாமல் இதனைச் செய்ததால் இந்நடவடிக்கை அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
சிவகாமி, வீட்டில் செய்த ஒரிகாமிப் பொருள்களை வகுப்புக்கு எடுத்துச் சென்று அவற்றை மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் காண்பித்தார்.
அவற்றை வியந்து பார்த்த அவர்கள் சிவகாமியைப் பாராட்டினர்.

