கடலுக்கு அடியில் வாழும் ஒரு விசித்திரமான உயிரினம்தான் கடற்குதிரை!
குதிரை போன்ற முகம், நீண்ட வால் எனப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய உயிரினங்கள், ஒருவகை மீன்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சிங்கப்பூர் கடற்பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட16 வகையான கடற்குதிரைகள் உள்ளன. அவற்றில் இருவகைகளை நாம் சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகத்தில் நேரில் கண்டுகளிக்கலாம்.
சிங்கப்பூர்க் கடல்வாழ்இனக் காட்சியகத்தில் இப்போது கடற்குதிரைகளுக்காகவே ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது. அந்தக் குட்டி உயிரினத்தின் ரகசியங்களை உடைக்கவே இந்தச் சிறப்பு நிகழ்ச்சி!
கடற்குதிரைகளைப் பற்றிய ஒரு அதிசயம் உங்களுக்குத் தெரியுமா? இங்கே அம்மாக்கள் அல்ல, அப்பா கடற்குதிரைகள்தான் முட்டைகளைச் சுமந்து, குஞ்சுகளைப் பொரிக்கின்றன!
கடற்குதிரைகள் நீந்துவதில் திறமைசாலிகள் கிடையாது. அதனால், கடல் அலைகளில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க, அவை தங்களின் வாலால் கடல் செடிகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும்.
ஆனால், அவற்றுக்கு நம்மால் ஒரு பேரிடர் காத்திருக்கிறது. அதுதான் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள்! நாம் கடலில் வீசும் நெகிழி உறிஞ்சுகுழல்கள் (Straws) கடற்குதிரைகளின் வாலில் சிக்கிக்கொண்டால் அவை நீந்துவதற்கு மிகவும் சிரமப்படும்.
ஆகையால், கடற்குதிரைகளைக் காப்பாற்ற வேண்டுமானால் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்கள் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து, மறுசுழற்சி செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அது கடலில் வாழும் இந்த அழகான கடற்குதிரைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
கடல்வாழினக் காட்சியகத்திற்குச் சென்று நீங்களும் இந்தக் குட்டி அதிசயங்களை நேரில் கண்டு இன்புறலாமே!

