சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் அயான் என்ற குரங்குக் குட்டி பிறந்துள்ளது.
மார்ச் 18ல் பிறந்த அயான், ‘ஓராங் உத்தான்’ எனப்படும் மனிதக் குரங்கு இனத்தைச் சேர்ந்தது.
தாயான சோமெல்லின் கருப்பையில் எட்டு மாதங்கள் இருந்த பிறகு அயான் பிறந்தது. மனிதக் குழந்தைகள் சராசரியாகப் பத்து மாதங்கள் தாயின் கருவறையில் வளர்ந்து பிறக்கும்.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குரங்குக் குட்டியாக அயான் உள்ளது.
அயான் என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘ஆசீர்வாதம்’ என்பது பொருள்.
பிறர் நலமாக இருக்க வேண்டும் என மனதார நினைத்து வாழ்த்துவதே ஆசீர்வாதம் எனப்படும்.
பிறந்தபோது தொடக்கத்தில் அயானின் இதயத் துடிப்பு பலமாக இல்லை. எந்த ஒலியும் எழுப்பாமல் சோர்வாக நலிந்த நிலையில் காணப்பட்டது.
ஏழு நிமிடங்களுக்குப் பிறகு அயான் தனது முதல் மூச்சை இழுத்துவிட்டபோது, விலங்கு மருத்துவர்களும் தாதியரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் ஓராங் உத்தான் எனப்படும் மனிதக் குரங்குகள் வாழ்கின்றன.
மனிதக் குரங்குகளில் மூன்று வகை உள்ளன. போர்னியோ மனிதக் குரங்கு, சுமத்திரா மனிதக் குரங்கு, தபானுலி மனிதக் குரங்கு ஆகியவை அவை.
ஆனால், மனிதர்கள் காடுகளை அழிப்பதாலும் வேட்டையாடுவதாலும் அவை மடிந்து வருகின்றன.
சோமெல்லின் பாட்டியான ‘ஆ மெங்’, பல்லாண்டுகளுக்கு முன்னதாகச் சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தின் பிரபலமான மனிதக் குரங்காகத் திகழ்ந்தது.
எனவே, அயான் குட்டி, ஆ மெங்கின் கொள்ளுப் பேரன். தாத்தா அல்லது பாட்டியின் தாய், தந்தையரைத் தமிழில் கொள்ளுத் தாத்தா அல்லது கொள்ளுப் பாட்டி என அழைப்பார்கள்.
குட்டி அயானையும் அதன் 29 வயதுத் தாயார் சோமெல்லையும் நீங்கள் வந்து பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் பொது விடுமுறை நாள்களிலும் அவற்றைக் காணலாம்.

