செங்காங் வட்டார நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கதையோடு விளையாடு என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ( 7- 7.30pm) நடைபெறுகிறது.
திருவாட்டி ஷோபா குமரேசன் கதைசொல்லியாக வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியில், மார்ச் மாதம்(14/03/25) சுமார் 42 மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் அன்று சிறுவர்களோடு பெரியோர்களும் கதையை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
கதையை வாய்மொழியாக மட்டும் சொல்லாமல், படவில்லைகளை (PPT) காண்பித்து கூறியதோடு, அதைத் தொடர்ந்து சில உற்சாகமூட்டும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
முதலில் நடந்த கேள்வி - பதில் அங்கத்தில் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கேற்ப அனைவரும் சரியான பதில் கொடுத்து அசத்தினர். அதைக் கண்டபோது கதையை அனைவரும் முழுவதுமாக உள்வாங்கியிருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
பிறகு அதைத் தொடர்ந்து நடிக்கலாம் வாங்க என்ற நடவடிக்கையில் 3 சிறுவர்கள் களமிறங்கி கதையில் உள்ள கதாமாந்தர்களாகவே மாறி நடித்துக் காட்டினர். அதற்கு அவர்களின் பெற்றோர்களும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெற்றோர்- பிள்ளைகளுக்கிடையே நல்ல பிணைப்பு நேரத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர வேண்டும் என்றும் பெற்றோர் சிலர் தங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டனர்.
இந்த அங்கத்திற்கு தொண்டூழியராக திருவாட்டி கார்த்திகா ரவிச்சந்திரன் அவர்கள் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது.