மாணவர்கள் தமிழ் மொழியில் பிழையின்றி எழுதவும், மொழி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் நடத்தப்பட்ட ‘தமிழோடு விளையாடு 2025’ நிகழ்ச்சியில் நன் சியாவ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொடக்கநிலை நான்கு, ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்காக இப்போட்டி நடத்தப்படுகிறது.
இதன் இறுதிப்போட்டியில் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மொத்தம் 70 பள்ளிகளிலிருந்து கிட்டத்தட்ட 350 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
அவற்றிலிருந்து 20 குழுக்கள் அரையிறுதிக்கும் பின்னர் நன் சியாவ் தொடக்கப்பள்ளி, செம்பவாங் தொடக்கப்பள்ளி, புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி, உட்லண்ட்ஸ் ரிங் தொடக்கப்பள்ளி, அங் மோ கியோ தொடக்கப்பள்ளி, வெலிங்டன் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த குழுக்கள் இறுதிச் சுற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்தப் போட்டி மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டிலும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடனும் நடத்தப்பட்டு வருகிறது.

