தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் மிகச் சிறப்பானது ‘பொங்கல்’ ஆகும். இதனைத் ‘தமிழர் திருநாள்’ என்றும் அழைப்பார்கள். இது நான்கு நாள்கள் கொண்டாடப்படும் மிகச் கோலாகலமான பண்டிகையாகும்.
முதல் நாள் - போகிப் பண்டிகை:
பொங்கல் விழாவின் முதல் நாள் போகி ஆகும். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதே போகிப் பண்டிகையின் நோக்கமாகும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களையும் பழைய பொருள்களையும் நீக்கிப் புதிய சிந்தனையோடு வாழ்வதையே இது குறிக்கிறது.
இரண்டாம் நாள் - தைப் பொங்கல்:
இரண்டாம் நாள் தைப்பொங்கல் ஆகும். இது தை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகிற்கு ஒளியும் பயிர்களுக்கு உயிரும் தரும் சூரியனுக்கு நன்றி செலுத்திப் பொங்கலிடும் நாள் இதுவாகும்.
மூன்றாம் நாள் - மாட்டுப் பொங்கல்:
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும். உழவர்களுக்குத் தோள் கொடுக்கும் காளைகளுக்கும் நன்மை தரும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நாள் அமைகிறது. அன்று மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, பொங்கலிட்டு வணங்குவார்கள்.
நான்காம் நாள் - காணும் பொங்கல்:
நான்காம் நாள் காணும் பொங்கல் ஆகும். இதனைப் பெரியவர்கள் ‘கன்னிப் பொங்கல்’ என்றும் அழைப்பர். அன்று நம் உற்றார், உறவினர்களை நேரில் சந்தித்து, பெரியவர்களிடம் ஆசி பெற்று, பலவிதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.

