உங்கள் பள்ளி விடுமுறையைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டமும் பறவைப் பாரடைஸும் இணைந்து ‘ஸ்னூப்பி’யையும் அதன் நண்பர்களையும் கண்டுகளிக்கும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன.
‘பீகல்’ என்ற வகையைச் சேர்ந்த உலகின் மிகப் பிரபலமான செல்ல நாய் வடிவம் இந்த விழாக்காலத்தில் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தை அலங்கரிக்கவுள்ளது.
நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் மண்டாய் வனவிலங்குக் காப்பகத்திற்குச் செல்வோர் அங்கு ‘ஸ்னூப்பி’(Snoopy)யையும் அதன் நண்பர்களின் வடிவங்களையும் கண்டு களிக்கலாம்.
அங்குச் செல்வோர் வனவிலங்கு வாழ்க்கை பற்றித் தெரிந்துகொள்வதுடன் பல விறுவிறுப்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். இவற்றுடன் பல அன்பளிப்பு முத்திரைகளையும் பெறலாம்.
உலகெங்கும் ‘பீனட்ஸ்’ என்ற நகைச்சுவைத் துணுக்கு மூலம் 1974ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அறிமுகமானது ஸ்னூப்பி. அந்தக் கதாபாத்திரத்தின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வனவிலங்குக் காப்பகத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் ஸ்னூப்பி கதாபாத்திரத்துடன் அதற்குத் துணைபோகும் அதன் சிறந்த நண்பர் உட்ஸ்டாக்குடன் ஆலிவியர், கான்ராட், பில், பிரெட், ஹாரியட், ரேமண்ட், ராய், வில்சன் ஆகிய எட்டுப் பறவை வகைகளும் இடம்பெறும்.
சாகசப் பாதைகளில் புகைப்படங்கள் எடுக்கும் இடங்கள்
சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்திலும் பறவை பாரடைஸிலும் சாகசத்தை மேற்கொள்ள விரும்பும் பார்வையாளர்கள் பங்கெடுக்கலாம்.
பார்வையாளர்கள் நான்கு சோதனைச் சாவடிகளையும் சரிபார்த்து, பாதைகளை நிறைவு செய்வதன் மூலம் அவர்கள் நினைவு சின்னங்களைப் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
உதாரணத்திற்கு ஓராங் உத்தான் இருக்கும் இடத்தில் விலங்குகள் சுறுசுறுப்பாக ஆராக்கியமாக இருக்க அவற்றுக்கு விலங்குப் பராமரிப்புக் குழுக்கள் கொடுக்கும் பொருள்களை பார்வையிடலாம்.
பறவை பாரடைஸில் மரக்கட்டைப் போன்று காட்சியளிக்கும் பறவையைக் கண்டுபிடிக்கலாம். இதுபோன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு நினைவுச் சின்னங்களைப் பெறலாம்.
வனவிலங்கு காப்பகத்தில் ஸ்னூப்பியுடன் படம் பிடித்துக்கொள்வதோடு ஸ்னூப்பி தன்னுடைய நாய் வீட்டின் மேல் படுத்திருக்கும் காற்று ஊதப்பட்ட வீட்டின் முன் நின்றும் படம் பிடித்துக்கொள்ளலாம்.
பார்வையாளர்கள் நட்சத்திரங்களுக்குக் கீழே குளிரூட்டப்பட்ட கூடாரத்தில் இரவைக் கழிப்பதற்கு முன், ஸ்னூப்பியின் கருப்பொருள் செயல்பாடுகளை ஆராய்ந்து அதில் பங்கேற்கலாம்.
அங்கு செல்ல விருப்பமில்லாதவர்கள் மண்டாய் வனவிலங்கு மேற்கு பொது இடத்தில் வேடிக்கை பார்க்கலாம்.
மேலும் குடும்பங்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கிறிஸ்துமஸ் சந்தைக்கு அழைத்துச் செல்லலாம். பண்டிகைக் கடைகளில் பரிசுகளை வாங்கவும் விடுமுறை பட்டறைகளில் சேரவும் சிறந்த உடை அணிந்த நாய்களுக்கான போட்டிகளிலும் பங்கேற்கலாம்.
இவை யாவும் 2025 ஜனவரி 5ஆம் தேதி வரைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விடுமுறையில் இங்கு பெற்றோருடன் சென்று அன்றைய பொழுதை இன்பமான பொழுதாக மாற்றுங்கள்.

