உள்ளத்தில் நம்பிக்கையும் அச்சமற்ற தன்மையும் இருந்தால் வெற்றி உங்கள் வசம் என்பதை உணர்த்தும் எலியின் கதை.
சுண்டெலி ஒன்று சோகத்துடன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தது. அதன் சோகத்தைப் பார்த்த தேவதை “உனக்கு என்ன கவலை?” ஏன் இப்படி சோகத்துடன் இருக்கிறாய்?” என்று கேட்டது.
“அம்மா! என்னை பூனை எப்போதும் துரத்துகிறது. எனக்குப் பூனையைப் பார்க்க பயமாக இருக்கிறது. அதனால் என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்,” என்றது.
உடனே எலி பூனையானது.
இரண்டு நாள்கள் கழித்து வந்த பூனை, “அம்மா! எங்கு இருக்கிறீர்கள்? என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றுங்கள்,” என்றது.
உடனே பூனை, நாயானது.
இதுபோல் ஒவ்வொரு நாளும் வந்து நாயாக வேண்டாம் என்னைப் புலி துரத்துகிறது. அதனால் என்னை மாற்றுங்கள் என்றது. பின்னர் புலியாக வேண்டாம் வேடன் துரத்துகிறான். அதனால் வேடனாக மாற்றுங்கள் என்றது.
இறுதியாக வேடனாக மாறிய எலி, மீண்டும் தேவதையைப் பார்க்க வந்தது.
“அம்மா! எனக்கு மனிதர்களைக் கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடைமறித்த தேவதை “சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினாலும் உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. அதனால் நீ மீண்டும் சுண்டெலியாகவே மாறிவிடு. உள்ளத்தில் நம்பிக்கையும் அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நீ எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது,” என்று கூறிவிட்டு மறைந்தது.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ - குறள்: 428 (அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள் என்று சொன்ன திருவள்ளுவர்தான், ‘எண்ணித் துணிக கருமம் (செயல்) - குறள்: 467 (நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு) என்றும் சொல்கிறார்.
இரண்டுக்கும் உள்ள அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டால் பயம் பற்றிய தெளிவு பிறக்கும். இனி பயம் என்று சொல்லும்போது நமது பயம் வெற்றியை நோக்கி உயர்த்துகிறதா அல்லது தோல்விக்கு இழுக்கிறதா என்பதையும் சேர்த்தே சிந்திக்கவேண்டும்.