புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் பாறைக் குழம்புகள் துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் வெடித்து வெளியே வருவதே எரிமலை வெடிப்பு எனப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ‘லாவா’ என்று அழைக்கப்படும்.
இந்தோனீசியாவின் வட சுலாவெசியில் உள்ள ருவாங் எரிமலை இம்மாதம் 17ஆம் தேதி வெடித்தது. அதிலிருந்து தொடர்ந்து பலமுறை புகையும் தூசும் வெளியேறின. எரிமலையிலிருந்து சுமார் 400 மீட்டர் உயரத்துக்குக் கரும்புகை வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவியில் உள்ள எரிமலைகளில் மிகப் பெரியது ஹவாய் தீவில் உள்ள ‘மவுனாலோவா’ ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. உயரம் கொண்டது.
எரிமலை வெடிப்பால் நிலநடுக்கம், நிலச்சரிவு, பாறைகள் வீழ்ச்சி, பெரும் காட்டுத் தீ, சுனாமி போன்ற வேறு பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்படக்கூடும்.
அடிக்கடி சீறும் தீவிரமான எரிமலையானது அமெரிக்காவின் மேற்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மௌன்ட் செயின்ட் ஹெலன்ஸ் ஆகும்.
ஜப்பான், ரஷ்யா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் சீறும் எரிமலைகள் உள்ளன.
புவியில் மட்டுமன்றி, செவ்வாய் போன்ற பிற கிரகங்களிலும் எரிமலைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எரிமலை நெருப்பைக் கக்கத் தொடங்குவது என்பது அமைதியாகவோ, பெரும் சத்தத்துடன் கூடிய வெடிப்பாகவோ நிகழலாம்.