டிஸ்னி, பிக்சர் நிறுவனத்தின் ‘இன்சைட் அவுட் 2’ நடத்தும் விழாவில் ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெறுங்கள்!
10வது முறையாக நடைபெறும் ‘கரையோரப் பூந்தோட்டம்’ சிறுவர் விழாவில் உணர்வுகள் குறித்த உலகத்தை ஆராயத் தயாராகுங்கள்.
தென்கிழக்கு ஆசியாவில் பெரிய அளவிலான படைப்புகளுடன் ‘இன்சைட் அவுட் 2’ கருப்பொருளுடன் கூடிய வெளிப்புற விழாவாக இது நடைபெறுகிறது.
மகிழ்ச்சி, கோபம், சோகம், பயம், வெறுப்பு போன்ற உணர்வுகளுடன் கவலை, பொறாமை, சலிப்பு, சங்கடம் போன்ற உணர்வுகளையும் சிறுவர் விழாவில் கண்டு மகிழுங்கள்!
இந்த விழா ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும். மேலும், இதில் இடம்பெறும் பெரும்பாலான நிகழ்வுகளையும் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
கரையோரப் பூந்தோட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபெலிக்ஸ் லோ, “நமது குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
“டிஸ்னி, பிக்சர் நிறுவனங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள், இதயம் தொடும் கதைகள் மூலம் குழந்தைகளின் மன அழுத்தம், உணர்வுகள் போன்றவை பற்றி வேடிக்கையாக அறிந்துகொள்ளலாம்.
“மிக முக்கியமாக, இந்த நிகழ்ச்சி குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தவும் நேரத்தை அர்த்தமுள்ள வகையில் ஒன்றாகச் செலவிடவும் துணைபுரியும்,’’ என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் மேம்பாட்டு இயக்குநர் ஆஷ்லின் லூ, “இன்சைட் அவுட் 2 மூலம் பல்வேறு விளையாட்டுக் கூடங்களையும் சுற்றிப்பார்த்து பார்வையாளர்கள் புதிய அனுபவங்களைப் பெறுவார்கள் என நம்புகிறோம்,’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மேலும் பல சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
‘கெலிடோஸ்கோப்’ நினைவுகள்
கெலிடோஸ்கோப் மையப்பகுதியின் உருவாக்கம் நீண்டகால நினைவுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது ‘இன்சைட் அவுட் 2’ படக் கதையில் மில்லியன்கணக்கான நினைவுகளைக் கொண்டிருக்கும்.
இந்த உருவாக்கத்தில் ஒரு கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம், பார்வையாளர்கள் தங்கள் சொந்த நினைவுகளை உருவாக்கி பதிவேற்கலாம்.
ஊஞ்சல் விளையாட்டு
‘எமோஷன் ஜாய்’ என்பது இந்த உருவாக்கத்தின் கருப்பொருள். இங்கு இடம்பெற்றுள்ள ஊஞ்சல்களில் அனைவரும் உற்சாகமாக விளையாடி மகிழலாம்.
‘டூடல்ஸ்’ வெளிப்பாடு
சிக்கலான உணர்ச்சிகளைச் சமாளிப்பது குறித்து அறிந்துகொள்ளலாம். ‘சோகம்’, ‘சங்கடம்’ ஆகிய உணர்வுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நீர் தூரிகையால் வண்ணம் தீட்டி மகிழலாம்.
உணர்வுபூர்வ கண்ணாடிகள்
‘பயம்’, ‘பதற்றம்’ பற்றிய சவால்களில் பங்கேற்கும் பார்வையாளர்கள் கண்ணாடி புதிர்ப் பாதை விளையாட்டுகளில் பங்கேற்று பயன்பெறலாம்.
‘ஃபோர்ட் பில்லோ டவுன்’
‘சலிப்பு’ என்ற உணர்வை மையமாகக்கொண்டு, பில்லோ டவுன் கோட்டையில் படுத்து ஓய்வெடுக்கலாம். அல்லது அதனை மையமாகக் கொண்டு கற்பனையில் ‘கோட்டைகள்’ கட்டலாம்.
‘மெமரி ஆஃப் மவுண்டைன்’
ஒரே உருவாக்கத்தில் எல்லா உணர்வுகளையும் அனுபவியுங்கள். நமது அனைத்து உணர்ச்சிகளையும் குறிக்கும் பெரிய பந்துகளுடன் இருக்கும் இந்த விளையாட்டுப் பகுதியில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் கற்றுக்கொள்ளலாம்.
குழந்தைகள் விழாவின்போது ‘தி மெட்லி எமோஷன்ஸ்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் இரவு 7.45, 8.45 ஆகிய இரு நேரங்களில் இரவு நேர ஒளிக் காட்சி நிகழ்ச்சி நடைபெறும். அங்கு கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்று வருகின்றன.
தேதி: மே 25 முதல் ஜூன் 22 வரை நேரம்: காலை 10-இரவு 9 மணி இடம்: சூப்பர் மரம் குரோவ் (நுழைவு இலவசம், சில நடவடிக்கைகள் இரவு 7 மணி முதல் மூடப்படும். மேல் விவரங்களுக்கு கரையோரப் பூந்தோட்டத்தின் இணையத் தளத்தை நாடலாம்.
மெமரிஸ் ஆஃப் கெலிடோஸ்கோப்
மனநிலை ஊஞ்சல்
எக்ஸ்பிரஷன் டூடல்ஸ்
இமோஷன் மிரர்ஸ்
ஃபோர்ட் பில்லோ டவுன்
மெமரி ஆஃப் மவுண்டன்

