தேனீக்கள் தேன் கூட்டில் தேனைச் சேகரித்துக்கொண்டு இருந்தன. ஒரு தேனீ வேகமாக பூக்களைத் தேடிப் புறப்பட்டது.
அப்போது தேனீக்களின் நடவடிக்கையைப் பார்த்துக்கொண்டு இருந்த பறவை ஒன்று தேனீயைப் பார்த்து, “ஓய்வில்லாமல் கடின உழைப்பின் மூலம் நீங்கள் தேனைச் சேகரிக்கிறீர்கள். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் தேனை மனிதர்கள் திருடிச் செல்கிறார்கள். அதற்காக நீங்கள் வருந்துவதில்லையா?” என்று கேட்டது.
அதற்கு தேனீ, “இல்லவே இல்லை. காரணம் மனிதர்கள் எங்களிடமிருந்து தேனை மட்டும்தான் திருடமுடியும். ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒருபோதும் அவர்களால் எங்களிடமிருந்து திருடமுடியாது,” என்று பரந்த மனப்பான்மையுடன் தன்னம்பிக்கையுடன் கூறிவிட்டு தன் கடமையான தேனைச் சேகரிக்கப் பறந்து சென்றது தேனீ.
அதன் பதிலைக் கேட்டு வியந்து போன பறவை அதன் பின்னால் பறந்து சென்றது.

