இன நல்லிணக்க நாள் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஜூலை 21ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இது சிங்கப்பூர் ஓர் இனவாரியான இணக்கமான நாடு என்பதைக் குறிக்கின்றது.
சிங்கப்பூரில் 1964ஆம் ஆண்டில் நிகழ்ந்த இன வன்முறைகளின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகச் செயல்பட்டுச் சிங்கப்பூரின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்.
இங்கு சீன, மலாய், தமிழ் மற்றும் ஐரோப்பியர் முதலிய பல இன மக்கள் எந்தவித வேறுபாடுமின்றி வாழ்கின்றோம். அதற்குத் துணையாகச் சமூக மன்றங்கள் மதக்குழுக்கள் மற்றும் பள்ளிகள் துணை புரிகின்றன.
அனைத்து இன மக்களும் அவர்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமலும் பிற இன மக்களின் உரிமையை மதித்தும் வாழ, இந்த இன நல்லிணக்க நாள் உதவுகின்றது.
‘ஒற்றுமையே பலம்’ என்பதைப்போல் நாம் வாழ்ந்து காட்டுவோம்.
ஹன்சிகா மோஹன்குமார்
சிங்கப்பூர் ஓர் அற்புதமான நாடு. பல கலாசாரங்கள் நம் நாட்டில் வேரூன்றிப் பதிந்துள்ளன.
எனது பள்ளியில், நான் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பல மாணவர்களுடன் பழகுகிறேன். அதன் மூலம் அவர்களின் கலாசாரத்தையும் கற்றுக்கொள்கிறேன்.
எந்த இனத்தவராக இருந்தாலும், அனைவரையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பள்ளியில் கற்றுக்கொள்கிறோம். எனக்கு வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளனர்.
சீனப் புத்தாண்டு, ஹரி ராயா, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அனைவரும் பாதுகாப்பை உணர நம் அரசாங்கம் கடினமாக உழைக்கிறது. எங்கள் பள்ளி செயல்பாடுகளில் இந்த முன்னெடுப்புகளைப் பற்றி நாங்கள் கற்றுக்கொள்கிறோம்.
எங்கிருந்து வந்தாலும் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாட்டில் வாழ்வதில் பெருமை கொள்கிறேன். நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம். இதுவே, சிங்கப்பூரில் அனைத்து இனத்தவரும் மகிழ்வுடன் வாழ்வதற்கான சிறந்த நாடாக அமையக் காரணமாகும்.
சயந்திரிகா சாய் அரவிந்
இன நல்லிணக்க நாள் என்பது 1964 ஆம் ஆண்டின் வகுப்புவாத கலவரங்களை நினைவுகூரும் வகையிலும், சிங்கப்பூரின் பன்முக கலாசார மற்றும் பல இன சமூகத்தில் இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவும் ஜூலை 21 அன்று ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நிகழ்வாகும்.
இந்த நாளில், மாணவர்கள், பிற கலாசாரங்களின் பாரம்பரிய உடைகளான சியோங்சம், பாஜு குரோங் மற்றும் சேலை போன்றவற்றை அணிந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே இனப் புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தைச் சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டுவதற்கு இந்த வரலாற்று நிகழ்வு உதவுகிறது. இந்நன்னாளில், நாம் ஒன்றாகக் கூடி, வெவ்வேறு கலாசாரங்களின் பாரம்பரிய உணவு வகைகளைப் பகிர்ந்து மகிழலாம்.
அனைவரும் ஒன்றுபடுவோம்; மகிழ்வுடன் வாழ்வோம்.
சுவார்நி செல்வகுமார்
வெவ்வேறு இனங்கள்... வெவ்வேறு கலாசாரங்கள்... ஆனால் ஒரே இலக்கு. நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்பது.
நாம் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, ஒன்றிணைந்து உயர்வுகளை அடைய விரும்புகிறோம்.
இன நல்லிணக்க நாள் என்பது வெவ்வேறு இனங்கள் ஒன்றுபடுவதற்கான இன்றியமையாமையைக் குறிக்கிறது.
எனவே, சிங்கப்பூரின் அமைதியான மற்றும் இணக்கமான எதிர்காலத்திற்காக நாம் ஒவ்வொருவரும் முயற்சியில் இறங்க வேண்டும்.
பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் கட்டமைப்பு மாறியிருக்கலாம். ஆனால், மக்களும் அவர்களின் நம்பிக்கைகளும் ஒருபோதும் மாறவில்லை. சிறந்த மற்றும் பிரகாசமான சிங்கப்பூருக்கு நாம் சரியானவற்றுக்காக ஒன்றுபட வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
ஜெயகுமார் ஜெனிஷா