சீனர், மலாய், இந்தியர், யுரேசியர், ஐரோப்பியர் என பலவிதமான இனங்களும் சங்கமிக்கும் சிங்கப்பூரில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ இன நல்லிணக்கம் இன்றியமையாத ஒன்று.
இதை சிறுவர்களிடத்தில் வலியுறுத்தும் நோக்கில் இந்தியன்.எஸ்ஜி நிறுவனம், சேக் சலாம் இந்தியா மாபெரும் கண்காட்சியின் ஆதரவோடு சனிக்கிழமை ஜூலை 13ஆம் தேதியன்று காலை 11 முதல் பிற்பகல் 2.30 மணி வரை இன நல்லிணக்க நாள் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தது.
N2, K1, K2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும் K2, P1, P2 மாணவர்களுக்குத் திறன் காட்டுதல் போட்டியும் நடைபெற்றன.
மாறுவேடப் போட்டி இன நல்லிணக்கம் என்ற கருவில் நடைபெற்றது. N2, K1 ஒரு பிரிவாகவும் K2 மற்றொரு பிரிவாகவும் வெவ்வேறு இனத்தாரின் வண்ணமயமான உடைகளில் காட்சியளித்தனர்.
திறன் காட்டுதல் போட்டியில் பாடல், கதைசொல்லுதல், நடனம் என மூன்று பிரிவுகள் இடம்பெற்றன. K2 பாலர்பள்ளி மாணவர்கள் தொடக்கநிலை மாணவர்களுக்கு ஈடுகொடுத்துப் போட்டியிட்டனர்.
“நம்மைவிட ஒரு நிலை மேலானோருடன் போட்டியிட்டால்தான் நம் தரம் மேம்படும்.
“இம்முறை N2 மழலையர்களுக்கும் பங்குபெற வாய்ப்பளித்தோம். இளங்கன்று பயம் அறியாது. சிறுவயதிலேயே மாணவர்களுக்கு மேடையில் பார்வையாளர்களின் முன்னிலையில் தம் திறன்களைப் படைக்கும் அனுபவம் வழங்கினால், அவர்களுக்கு மேடை பரீட்சயமாகிவிடும்.” என்றார் போட்டி ஏற்பாட்டாளர் கல்யாண்.
ஐந்து பிரிவுகளில் மொத்தம் 15 பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் வீட்டிற்குத் திரும்பிய அனைத்துச் சிறுவர்களும் ஒரு பதக்கத்தோடு திரும்பினர்.
தொடர்புடைய செய்திகள்
“இவ்வளவு சிறுவயதுச் சிறுவர்களை கலந்துகொள்ளச் செய்வது எளிதல்ல. அதனால், அனைவருக்கும் பதக்கம் வழங்கி பெற்றோரையும் பிள்ளைகளையும் ஊக்குவிக்கிறோம். பெற்றோர் நினைத்தால்தான் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியைக் கொண்டுசெல்லமுடியும்.” என அவர் கூறினார்.