ராட்சத எறும்புண்ணி (Giant Anteater):
இந்த ராட்சத விலங்கிற்குப் பற்கள் கிடையாது! ஆனால், பசைபோல ஒட்டக்கூடிய 60 சென்டிமீட்டர் நீளமுள்ள நாக்கு இருக்கிறது. இதை வைத்து, ஆயிரக்கணக்கான எறும்புகளையும் கரையான்களையும் நொடிப்பொழுதில் பிடித்து விழுங்கிவிடும்.
கடல் பசு (Manatee):
‘மானட்டி’ என்று அழைக்கப்படும் கடல் பசுக்களுக்கு, நாம் நினைப்பது போல வாயின் முன்பகுதியில் பற்கள் கிடையாது. இவை தங்களின் வலுவான உதடுகளையும் ஈறுகளையும் பயன்படுத்தி, கடலடியில் உள்ள புற்களையும் பாசிகளையும் பிடுங்கி அப்படியே விழுங்கிக்கொள்ளும்.
தேரை (Toad):
பெரும்பாலான தவளைகளுக்கு மேல் தாடையில் மட்டும் சிறிய பற்கள் இருக்கும். ஆனால், தேரைகளுக்குப் பற்களே கிடையாது! இவை தங்களின் நீண்ட, ஒட்டும் தன்மையுள்ள நாக்கால் பூச்சிகளையும் புழுக்களையும் குறிபார்த்துப் பிடித்து அப்படியே முழுதாக விழுங்கிவிடும்.
ஆமை (Turtle):
ஆமைகளுக்கும் பற்கள் கிடையாது! ஆனால், அவற்றின் வாய் ஒரு பறவையின் அலகைப் போல மிகவும் வலிமையாக இருக்கும். இந்தக் கொக்கி போன்ற அலகைக் கொண்டு உணவைக் கடித்து விழுங்கும். சில ஆமைகள் பழங்கள், பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளைக்கூட இப்படித்தான் உண்கின்றன.
அலங்கு (Pangolin):
உடலெங்கும் செதில்களுடன் இருக்கும் இந்த விலங்கிற்கும் பற்கள் கிடையாது. எறும்புண்ணிகளைப் போலவே இதற்கும் நீண்ட, ஒட்டும் நாக்கு இருக்கிறது. இதை வைத்து எறும்புகளையும் கரையான்களையும் அவற்றின் வளைகளுக்குள் இருந்து எளிதாகப் பிடித்துச் சாப்பிடும்.
பறவைகள் (Birds):
பறவைகளுக்குப் பற்கள் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், பற்களுக்குப் பதிலாக அவற்றின் அலகுகள் உணவைச் சாப்பிட உதவுகின்றன. கழுகுகள் கூர்மையான அலகுகளால் இரையைக் கிழிக்கும்; கொக்குகள் நீளமான அலகால் மீன்களைப் பிடிக்கும். ஒவ்வொரு பறவையின் அலகும் அதன் உணவு முறைக்கு ஏற்ப அதிசயமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலந்தி (Spider):
சிலந்திகளுக்கும் நம்மைப் போன்ற பற்கள் கிடையாது. அவை ‘கெலிசெரே’ (Chelicerae) எனப்படும் கொடுக்கு போன்ற வாய் உறுப்புகளைப் பயன்படுத்தி இரையைக் கவ்விப் பிடிக்கும். பிறகு, ஒரு சிறப்புத் திரவத்தை இரையின் மீது செலுத்தி, அதைத் திரவமாக (ஜூஸ் போல) மாற்றி உறிஞ்சிக் குடிக்கும்.
நத்தை (Snail):
நத்தைகளுக்குப் பற்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கலாம்! ஆனால், அவற்றின் வாயில் ‘ராடுலா’ (Radula) என்றொரு சிறப்புத் தசை இருக்கிறது. இதில் கண்ணுக்கே தெரியாத ஆயிரக்கணக்கான நுண்ணிய முட்கள் இருக்கும். இதை ஒரு உப்புத்தாள் (Sandpaper) போலப் பயன்படுத்தி, இலைகளைச் சிறுசிறு துகள்களாக அரைத்துச் சாப்பிடும்.
தொடர்புடைய செய்திகள்
இயற்கையின் அற்புதம்!
இந்த உயிரினங்கள் பற்கள் இல்லாமலேயே தங்களின் வாழ்விடத்திற்கும் உணவு முறைக்கும் ஏற்ப தங்களை மாற்றி அமைததுக் கொண்டுள்ளன என்பது உண்மையிலேயே பெரிய ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா மாணவர்களே!

