கோல்கத்தா: ஐபிஎல் டி20 ஓவர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 223 ஓட்டங்களை வெற்றிகரமாக விரட்டிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ராஜஸ்தான்.
செவ்வாய்க்கிழமை இரவு கோல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் பந்தடித்த கோல்கத்தா அணிக்கு சுனில் நரேன் சிறப்பான துவக்கம் கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவர் ஆறு சிக்சர்கள், 13 பவுண்டரிகள் என 56 பந்துகளில் 109 ஓட்டங்கள். விளாசினார்.
சுனில் நரேனின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் கோல்கத்தா 6 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம் தந்தார். அவர் 9 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த ரியன் பராக் விரைவாக 34 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.
இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற ராஜஸ்தான் அணியின் வெற்றி கேள்விக்குறியாக மாறியது.
இந்நிலையில் ஜாஸ் பட்லருடன் இணைந்த ரோவ்மன் பவ்வல் அடுத்தடுத்து சிக்சர்களும் பவுண்டரிகளும் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றினர்.
ராஜஸ்தான் மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பும் நேரத்தில் ரோவ்மன் பவ்வலை சுனில் நரேன் வெளியேற்றினார். 18 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணியை பட்லர் தனி ஆளாக மீட்டார்.
18ஆவது ஓவரில் 18 ஓட்டங்களை எடுத்த அவர், 19வது ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தார். காலில் காயம் இருந்தாலும் ஆட்டத்தின் கடைசி பந்தில் விட்டுக்கொடுக்காமல் ஓடி வெற்றியை எட்டிப்பறித்தார் பட்லர்.
சிறப்பாக விளையாடிய பட்லர் 60 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார். ஒரே ஆட்டத்தில் இரண்டு சதங்களைபார்த்த கோல்கத்தா ரசிகர்கள், பட்லரின் துனிச்சலான ஆட்டத்தைப் பாராட்டி உள்ளனர்.
புள்ளிப்பட்டியலில் தற்போது ராஜஸ்தான்(12 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கோல்கத்தா 8 புள்ளிகளுடன் உள்ளது.