சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இவற்றுள் 1,733 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும் அவற்றுள் 1,414 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு வழங்குவது அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்தக் குற்றத்துக்கான தண்டனை குறைவாக இருப்பதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து 2019 மக்களவைத் தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.