ராமநாதபுரம்: தங்கள் ஊரைச் சேர்ந்தவரைத் தாக்கியவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ஒட்டுமொத்த கிராமத்தினரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே அமைந்துள்ளது சவேரியார் பட்டணம் என்ற கிராமம். அவ்வூரைச் சேர்ந்த குழந்தை என்ற முன்னாள் ராணுவ வீரரை, அருகில் உள்ள மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட கும்பல் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த குழந்தை, தற்போது மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளபோதும் இதுவரையிலும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வாக்களிக்கப்போவது இல்லை எனக் கூறி, பதாகை வைத்தும் கறுப்புக்கொடி ஏந்தியும் சவேரியார் பட்டணம் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.