இந்த வாரம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைப் புரட்டிப்போட்ட கடும் புயல், மழை ஆகியவற்றால் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் அதன் நகரங்கள் அந்த பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன.
துபாயில், பிரதான சுற்றுலா நடுவமாக விளங்கும் அதன் விமான நிலைய ஓடுபாதைகள், கடும் மழை காரணமாக வெள்ளத்தால் மூழ்கியது. அதன் விளைவாக, விமானச் சேவைகளை மற்ற நகரங்களுக்கு மாற்றி விடுதல், விமானச் சேவை ரத்து ஆகியவை மேலோங்கி இருந்தன.
பெரும்பாலும் வெளிநாட்டு விமானங்கள் பயன்படுத்தும் அதன் முதலாவது முனையத்தில் விமானங்கள் தரையிறங்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்த துபாய் விமான நிலையம், இருப்பினும் விமான சேவையில் தாமதம், ரத்து ஆகியவை தொடர்கின்றன என்றும் கூறியது.
துபாயின் பிரதான விமானச் சேவை நிறுவனமான எமிரட்ஸ், ஏப்ரல் 18ஆம் தேதி துபாய் நேரப்படி காலை 9 மணிக்கு (சிங்கப்பூர் நேரம்: பிற்பகல் 1 மணி) பயணிகளை ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்தது. அதற்கு முன்னதாக அந்நிறுவனம் புதன்கிழமை நள்ளிரவுக்கே அவ்வாறு செய்யவதாக இருந்தது. இருப்பினும், ஒன்பது மணிநேர தாமதத்துக்குப் பிறகே அது பயணிகளை ஏற்கத் தொடங்கியது.
விமான நிலையத்துக்கு அருகில் உள்ள சாலைகள் வெள்ளத்தால் மூழ்கி, போக்குவரத்து நிலைக்குத்தி இருந்ததால், விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்க விமான நிலையம் போராடியது.
ஏப்ரல் 14ஆம் தேதி அண்டை நாடான ஓமானைத் தாக்கிய புயல் ஏப்ரல் 16ஆம் தேதியன்று ஐக்கிய அரபு சிற்றரசுகளைத் தாக்கியது. கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் சாலைகளை மூழ்கடித்தது. வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது. இதில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒருவரும் ஓமானில் 20 பேரும் மாண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சாலைகளில் சூழ்ந்திருக்கும் வெள்ளநீர் வடியும்வரை அரசாங்க ஊழியர்களும் மாணவர்களும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்க அமைப்புகள் கேட்டுக்கொண்டன.
புயலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுமாறும் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும்படியும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகம்மது ஸயீது அல் நஹ்யான் உத்தரவிட்ட அறிக்கையை ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அரசாங்க ஊடகம் ஏப்ரல் 17ஆம் தேதி பின்னிரவில் வெளியிட்டது.