சிங்கப்பூரில் 12 வயதும் அதற்குக் குறைவான வயதும் உடைய பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் $500 உதவித்தொகை வழங்குகிறது.
ஜூலை 14 முதல் இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.
மேலும், இந்த ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உதவித்தொகை கிடைக்கும்.
எந்த விண்ணப்பமும் தேவையில்லை! குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள், தங்களின் ‘லைஃப்எஸ்ஜி’ (LifeSG) செயலி மூலம் அதை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். பணம் போடப்பட்டதும் குறுந்தகவல் அனுப்பப்படும்.
‘பேநவ்’ (PayNow), ‘யுஇஎன் கியூஆர்’ (UEN QR), ‘நெட்ஸ் கியூஆர்’ (NETS QR) வழியாகக் கட்டணங்களை ஏற்கும் இணைய வணிகர்களிடமும் கடைகளிலும் அவ்வுதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
1. மளிகைப் பொருள்கள், பிடித்த பண்டங்கள்
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் போன்ற முன்னணி பேரங்காடிகளில் இந்த உதவித்தொகையைப் பயன்படுத்தலாம்.
அத்துடன் ‘அடர்ஸ்’ (Udders) பனிக்கூழ் கடையில் பனிக்கூழ் வாங்கிச் சுவைக்கலாம்!
2. கல்விக்கான வளங்கள்
பள்ளிக்குத் தேவையான பொருள்கள், கதைப் புத்தகங்களை வாங்க கினோக்குனியா, பாப்புலர் புத்தகக் கடைகளில் உதவித்தொகையைப் பயன்படுத்தலாம்.
3. வார இறுதி நடவடிக்கைகள்
ஹோம்டீம் என்எஸ் காத்திப் வளாகத்தில் உள்ள ‘அட்வென்ச்சர் எச்கியூ’ (Adventure HQ), ‘ஹே டெய்ரிஸ்’ (Hay Dairies) ஆட்டுப்பண்ணை, ‘கிளைம்ப் சென்ட்ரல்’ (Climb Central) விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழலாம்.
4. அத்தியாவசியத் தேவைகள்
‘மதர்கேர்’ (Mothercare), ‘கிடி பேலஸ்’ (Kiddy Palace), ‘ஆப்டிகல் 88’ (Optical 88) போன்ற கடைகளில் பிள்ளைகளுக்கான பொருள்களை வாங்கலாம்.
5. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு
உதவித்தொகையை இப்போதே செலவழிக்க வேண்டாமா? பிள்ளைகளின் சேமிப்புக் கணக்கில் அதை நேரடியாகச் செலுத்தி, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தலாம்.

