ஆப்பிரிக்காவின் அரிய வகைக் காட்டு விலங்குகளைக் காண விமானத்தில் வெளிநாட்டுக்குச் செல்லவேண்டியதில்லை.
சிங்கப்பூரில் உள்ள மண்டாய் வனவிலங்குப் பூங்காவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பகுதியில் அவற்றை நீங்கள் காணலாம்.
உலகில் வேறு எங்குமே இல்லாத தாவர, விலங்கு வகைகளைக் கொண்ட மடகாஸ்கர் தீவின் நிலப் பகுதியைப் போலவே கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நாம் தரையில் நடந்துதான் விலங்குகளைப் பார்ப்போம்.
ஆனால் இங்கு, மரங்களின் உச்சியில் தொங்கும் கயிற்று வலைகளிலும் கம்பிவடத்திலும் பயணம் செய்தபடியே ‘ஒகாப்பி’ போன்ற அரிய வகை விலங்குகளைப் பார்க்க முடியும்.
எட்டு மீட்டர் உயர ஊஞ்சலில் அந்தரத்தில் பறந்துகொண்டும், 11 மீட்டர் உயரச் செயற்கை மரத்தில் ஏறியும் டயானா குரங்குகளை நேருக்கு நேர் பார்த்து மகிழலாம்.
இது விலங்குகளின் வசிப்பிடங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவும் சிறந்த கல்வி அனுபவமாகும்.
இங்குள்ள புதிய விலங்கியல் மருத்துவமனையில், அடிபட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. விலங்குகளைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘குரோக்கடைல் லாட்ஜ்’ கூடார இடத்தில் தங்கி இயற்கையோடு இருக்கும் வாய்ப்பும் உள்ளது.
பூங்காவைச் சுற்றிப்பார்த்த பிறகு பசித்தால் கவலையே வேண்டாம்! இங்கிருக்கும் ‘ரேஞ்சர்ஸ் ரிட்ரீட்’ என்ற உணவகத்தில் ஆப்பிரிக்க நாட்டுச் சுவையில் பல உணவுவகைகளை நீங்கள் சுவைக்கலாம்.
இந்த விடுமுறையில், உங்கள் குடும்பத்தினருடன் அங்குச் சென்று விலங்குகளைப் பார்ப்பதோடு இயற்கையின் அழகையும் ரசித்து வாருங்கள்!

