கி.விஜயலட்சுமி
ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கில் நவம்பர் 2ஆம் தேதி, கிட்டத்தட்ட 150 சிறார்களுக்கு ‘அனீசா சன்ஷைன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்போது பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அதற்குத் தீர்வு வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ள உலகளாவிய முயற்சி இது.
மேலும், சூரிய சக்தியைக் கவனமாகக் கையாண்டு, அதனைப் பயன்படுத்தி சிறார்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ஜப்பான் காற்பந்துச் சங்கம், சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து அனீசா எனும் ‘சன்ஸ்கிரீன்’ தயாரிப்பு நிறுவனம் இப்பயிற்சி வகுப்பை வடிவமைத்தது.
நவம்பர் 2ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், ஜப்பான் காற்பந்துச் சங்கத்தின் பயிற்சியாளர்கள் தலைமையில் காற்பந்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அத்துடன், சூரியனின் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாண்டுத் திட்டத்தின் முக்கிய அம்சம் அனீசா சன்ஷைன் ஆய்வகம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்ப் பிள்ளைகளின் இயல்பான கற்றல் ஆர்வத்தை அங்கீகரிக்கும் வகையில் கல்வியையும் விளையாட்டையும் ஒன்றிணைத்து இருவழித்தொடர்புப் பாடங்களாக அவற்றை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அனீசா சன்ஷைன் ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காற்பந்து வீரர் ஹசன் சன்னி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமது காற்பந்து பயணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சில தகவல்களையும் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொண்டார்.

