டிக்டாக், யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற சமூக ஊடகங்களை ஒருபுறம் தள்ளி, நண்பர்களுடன் நேருக்கு நேர் விளையாடி நேரத்தை இனிமையாகக் கழிக்கத் தூண்டியது அண்மையில் நடந்த ‘டோன்ட் பிளே பிளே’ கண்காட்சி.
இந்தக் கண்காட்சியின் சிறப்பு நடவடிக்கைகள் ‘ஒன் பொங்கோல்’ சமூக மன்றத்தில் 13, 14ஆம் தேதிகளிலும் 20, 21ஆம் தேதிகளிலும் நடைபெற்றன.
தேசிய மரபுடைமை வாரியம் ஏற்பாடு செய்த அந்தக் கண்காட்சியில், பொதுமக்கள் விளையாடி மகிழ்வதற்குப் பற்பல பலகை விளையாட்டுகள் இடம்பெற்றன.
‘சோங்காக்’, ‘குட்டி குட்டி’ போன்ற சிங்கப்பூருக்கே உரிய பாரம்பரிய விளையாட்டுகளை வருகையாளர்கள் விளையாடிப் பார்த்து மகிழ்ந்தனர்.
பெற்றோர் பல்லாண்டுகளுக்கு முன்பு தாங்கள் விளையாடிய விளையாட்டுகளைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தனர்.
‘கோபி கிங்’ எனும் அட்டை விளையாட்டை மாணவி ஷெரீனா விளையாடிப் பார்த்தார்.
“எப்பொழுதும் என் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டே இருக்காமல், என்னால் விளையாடக்கூடிய நிறைய புதிய விளையாட்டுகளைப் பற்றி இங்கு தெரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.
‘கோபி கிங்’ சிங்கப்பூரிலேயே உருவான விளையாட்டுகளில் ஒன்று. அதனுடன் விலங்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறுவர்களுக்கான மாஜோங் விளையாட்டான ‘அனி-மா’ (Ani-mah), ‘பெரனாக்கன்’ (Peranakan) பலகை விளையாட்டு ஆகியவற்றையும் கண்காட்சியில் பார்வையாளர்கள் விளையாடிப் பார்த்தனர்.
களிமண்ணால் பொம்மைகளைச் செய்வது, கேரம் பலகையில் வண்ணம் தீட்டுவது போன்ற சுவாரசியமான, விறுவிறுப்பான விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் அங்கம் வகித்தன.
பழைய நினைவுகளைத் தூண்டிய பாரம்பரிய விளையாட்டுகளையும், புதிய நினைவுகளை உருவாக்க வழிவகுத்த இக்கால விளையாட்டுகளையும் ‘டோன்ட் பிளே பிளே’ கண்காட்சியின் மூலம் குடும்பத்தினர் பலரும் ரசித்து அனுபவித்தனர்.

