இயக்குநர் இமயம் பாரதிராஜா, காலஞ்சென்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இருவரையும் நினைவுகூரும் வண்ணம் நான்கு சிறார் அவர்களின் தனித்துவமான தமிழ்த் திரைப் பாடல்களை சனிக்கிழமை (செப்டம்பர் 12) மேடையேற்றினர்.
சிங்கப்பூர் கலைப்பள்ளியில் நடைபெற்ற ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழுவின் ‘சூப்பர் சிங் அலோங்’ இசை நிகழ்ச்சியில் பிரனிஷா பிரபாகரன், ஜாஸ்ரிதா கார்த்திகேயன், ராஜீவ் இஷானிகா, அக்ஷரா கௌஷிக் ஆகியோர் பாடிப் பல கைதட்டல்களைக் குவித்தனர்.
கருத்தம்மா திரைப்படத்தின் ‘போராளே பொன்னுத்தாயி’, சந்திரமுகி திரைப்படத்தின் ‘கொக்கு பற பற’ பாடல்களை அவர்கள் பாடினர்.
தந்தை கௌஷிக் உதவியுடன் ஒரே நாளில் பாடலை மனப்பாடம் செய்ததாகத் தெரிவித்தார் அக்ஷரா.
என் நண்பர்களுடன் சேர்ந்து பாடியதில் மிக்க மகிழ்ச்சி என்றார் அவர்.
“இசைக்குழுவாகப் பாடிய அனுபவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. எங்களால் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்றார் இஷானிகா.
‘ரீஇன்கார்னேஷன் சூப்பர் சிங் அலோங்’ இசை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 200 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
இளம் கலைஞர்களுக்கான மேடையை வழங்குவதோடு மட்டுமன்றி, அவர்களுக்குச் சரியான முறையில் வழிகாட்டப்படுவதற்கும் இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது என்று நிகழ்ச்சியின் அமைப்பாளர் அபர்ணா கௌஷிக் கூறினார்.
சிங்கப்பூரில் திறமைக்குப் பஞ்சமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்முறையாக மேடையேறிய ஜாஸ்ரிதாவும் பிரனிஷாவும், “எனக்குச் சற்றுப் பதற்றமாக உள்ளது. ஆனாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்றனர்.
சிறார் இசைக்குழு படைப்பைத் தவிர ஏறத்தாழ 60 பாடல்கள் ஒரு ‘மெட்லி’ தொகுப்பாக நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
பிரபல உள்ளூர் பாடகர்கள் கௌஷிக் சுரேஷ், மீனாட்சி ஜோதிஷ், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்கள் பூஜா வைத்தியநாதன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் இந்த இசை விருந்தைப் படைத்தனர்.

