சிங்கப்பூரில் இவ்வாண்டு இரு முக்கிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன என உங்களுக்குத் தெரியுமா?
இவ்வாண்டின் உலக நீர் விளையாட்டுப் போட்டிகள் (World Aquatics Championships) முதன்முறையாக தென்கிழக்காசியாவில், குறிப்பாக சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன.
உடற்குறை உள்ளோருக்கான உலக நீச்சல் போட்டிகளும் முதன்முறையாக ஆசியாவில், குறிப்பாக சிங்கப்பூரில் நடைபெறும்.
இதுபோன்ற மென்மேலும் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவேண்டுமெனில் வலுவான தொண்டூழியர் அணி முக்கியம் என பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிறுவர்களே, சிங்கப்பூரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீங்களும் பங்காற்றலாம்.
சிங்கப்பூரின் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பக்கபலமாக இருந்துவருகிறது ‘டீம் நிலா’ தொண்டூழியர் அணி. அதில் எந்த வயதில் வேண்டுமானாலும் சேரலாம்.
சிறுவர்களைப் பரவசப்படுத்திய கேளிக்கைவிழா
‘டீம் நிலா’வின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு, புக்கிட் கேன்பராவில் நடைபெற்ற முதல் ‘டீம் நிலா’ கேளிக்கைவிழாவில் சிறுவர்கள், பெரியவர்கள், தொண்டூழியர்கள், என மொத்தம் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு வருகையளித்த பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த நாடாளுமன்றச் செய்லாளர் எரிக் சுவா, அமைச்சர் கிரேஸ் ஃபூ, ஆகியோரைக் கண்டு சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பல்வகையான விளையாட்டுகளிலும் சிறுவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்; பரிசுகளும் பெற்றனர்.
“இந்த விழா அனைவரையும் ஒன்றாக இணைத்தது. உடற்கட்டோடு இருப்பதை வலியுறுத்தியது,” என்றார் இவ்வாண்டு ‘டீம் நிலா’ தொண்டூழியராகப் பதிவுசெய்துள்ள அனுஷ்மித் முகர்ஜி, 11. அவருடைய தந்தையும் ‘டீம் நிலா’ தொண்டூழியரே.
“என் பெற்றோர், தம்பியுடன் இன்று வந்திருந்தேன். இன்றைய நிகழ்ச்சியில் எனக்கு பவுன்சி காசில் பிடித்திருந்தது,” என்றார் நிரல்யா, 12. அவருடைய பெற்றோர் இருவரும் 2020லிருந்து ‘டீம் நிலா’வில் தொண்டூழியம் புரிந்துள்ளனர்.
‘டீம் நிலா’ சிங்க உருவப்பொம்மையுடன் புகைப்படங்கள் எடுத்தும் சிறுவர்கள் மகிழ்ந்தனர்.

