ஒன்பது வயது சக்தி குமார், குணத்தில் அமைதியானவர். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அவர் தம் சிந்தனைகளை அலையவிடாமல் கூர்ந்து கவனம் செலுத்துவார். வீட்டுப்பாடங்களைச் செய்வதுடன் துணைப்பாட வகுப்புகளுக்கும் செல்வார்.
சக்தி பலரிடம் அதிகம் பேசுவதில்லை. இருந்தபோதும், தம் பெரியம்மா மகனான 15 வயது தீரனை அண்ணனாகக் கருதிப் பாசத்துடன் பழகுவார். தீரனும் சக்தியைத் தமது தம்பியாக நடத்தி அன்பு காட்டுவார்.
சக்திக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் என்ற ஆசை தீரனுக்கு ஒருநாள் தோன்றியது. ஏழு வயது முதல் நீச்சல் கற்றுவரும் தீரன், நீச்சலடிப்பதைப் பெரிதும் விரும்புபவர். சக்திக்கோ நீச்சல் தெரியாது.
அண்ணன் தீரனிடமிருந்து அடிப்படை நீச்சல் கற்கச் சக்தி ஒப்புக்கொண்டார். பாதுகாப்பான நீச்சல் குளத்தில் தீரன், சக்தியைப் பொறுப்புடன் வழிநடத்தினார். சக்திக்குப் பயம் ஏற்படும்போதெல்லாம் தீரன் அவரை ஊக்குவிப்பார்.
நீச்சல் மனத்திற்கு இதத்தைத் தருவதுடன் அறிவைப் பலப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தீரனுடன் வாரத்திற்கு ஒரு நாள் நீச்சலடித்த சக்திக்கு நல்ல மாற்றம் மெல்ல ஏற்பட்டது.
சக்தி நீச்சல் பழகிக்கொண்ட பின்னர், முறையாக நீச்சல் வகுப்பிலும் சேர்ந்தார். அண்ணன் தீரன் மீதான பாசமும் மதிப்பும் சக்திக்கு மேலும் அதிகரித்தன.
அத்துடன், சக்திக்கு முன்பு இருந்த பதற்றம் குறைந்து அவர் தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார். வகுப்பறையில் உரையாற்றவும் பழகினார். பணிவு மட்டுமன்றித் துணிவுடனும் திகழ்கிறார் சக்தி.

