ஒவ்வோர் ஆண்டும் தேசிய தின அணிவகுப்பு மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த முறை சிங்கப்பூரின் 61வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் முதல்முறையாகக் குறும்படம் வெளிவருகிறது.
தயக்கமும் பயமும் நிறைந்த ஜுரிடா என்ற பெண், தடைகளைத் தாண்டி தன்னம்பிக்கை பெறும் கதையை மையமாக வைத்து இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜுரிடாவின் நண்பர் ஆனந்த்.
அனைத்துத் தேசியப் பாடல்களும் அவருக்கு அத்துபடி. அதனைப் பாடியே அனைவரையும் அவர் மகிழ்விப்பார்.
தொடக்கத்தில் ஜுரிடாவுக்கு அது பிடிக்கவில்லை. அவரின் மனம் மெல்ல மெல்ல எப்படி மாறுகிறது என்பதே இந்தக் குறும்படத்தின் கதை.
குறும்படத்தை நீங்கள் ஆறு பாகங்களாக யூடியூப்பில் காணலாம். ‘என்டிபீப்ஸ்’ (NDPeeps) யூடியூப் ஒளிவழியில், குறுநாடகத் தொடருக்கான முதல் இரண்டு பாகங்களுக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாவது, நான்காவது பாகங்கள் மே 23ஆம் தேதி வெளியானது. இறுதி இரண்டு பாகங்கள் மே 26ஆம் தேதி வெளியீடு காணும்.
நாட்டுப்பற்றுப் பாடல்கள் நிறைந்த இந்தப் படத்தைப் பிரபல உள்ளூர் இயக்குநர் கே ராஜகோபால் தயாரித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆடலும் பாடலும் நிறைந்த இந்தப் படம், தேசிய தின அணிவகுப்பு போல கொண்டாட்டமாக இருக்கும் எனத் திரு ராஜகோபால் கூறினார்.
நல்ல நட்பு பற்றிய கதை. அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்தைப் பற்றிய கதை இது என்றும் அவர் கூறினார்.
‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்!’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
தேசிய அணிவகுப்புக்காகப் பாடுவதையும் நடிப்பதையும் பெருமையாகக் கருதுவதாகப் படத்தின் கதாநாயகி இமான் ஃபாண்டி தெரிவித்தார்.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற முன்னாள் காற்பந்து வீரர் ஃபாண்டி அகமதின் மகளான இமான், இந்த நாடகத்தின்வழி சிங்கப்பூரர்கள் நம்பிக்கை பெற வேண்டும் என விரும்புகிறார்.
ஜுரிடாவின் நண்பரான ஆனந்த் என்ற கதாபாத்திரத்தைப் பிரபல ‘ராப்’ இசைக் கலைஞரும் பாடலாசிரியருமான யங் ராஜா ஏற்றுள்ளார்.
இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அணிவகுப்பு தேசிய விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 42,000 பார்வையாளர்கள் இங்கு அமர்ந்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு பாடாங்கில் நடந்த தேசிய தின அணிவகுப்பில் கிட்டத்தட்ட 27,000 பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
எப்போதும்போல பல வண்ணங்களில் அழகிய வாணவேடிக்கையைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

