இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தி 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். அன்றைய தினம் இந்தியாவில் காந்தி பிறந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.
இந்தியாவில் தேசிய விடுமுறையாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகளால், அனைத்துலக அகிம்சை நாளாகவும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் மாணவர்கள் காந்தி வலியுறுத்திய இன, சமய நல்லிணக்கப்படி, ஏழு மதங்களின் வழிபாட்டுப் பாடல்களைப் பாடினர். ‘ரகுபதி ராகவா’ பாட்டிற்கும் நடனமாடினர்.
சுவரொட்டி, புகைப்படப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் அன்றைய தினம் பரிசளிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் காந்திக்கும் இடையே உள்ள தொடர்பு
காந்தி ஜனவரி 30, 1948ல் இறந்தபோது, அவரது அஸ்தி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு, மார்ச் 28 அன்று கிளிஃபர்டு பியரில் கரைக்கப்பட்டது. காந்தியின் விருப்பப்படி வெவ்வேறு சமயங்கள், இனங்கள், நாடுகளிலிருந்து 10,000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2018ல் இந்திய பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, கிளிஃபர்டு பியரில் மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தார்.
பல்வேறு மக்களும் உயர்வு தாழ்வு பாராமல் ஒற்றுமையுடன் வாழும் சிங்கப்பூரில் காந்தியின் அறநெறிகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.