பலரையும் இணைக்கும் வலிமை படைத்த இணையம் அண்மைய ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சி கண்டு, திறன்பேசி மூலம் பலரது உள்ளங்கைகளில் வந்த இன்றியமையாத தொழில்நுட்பம் ஆகிவிட்டது. குறிப்பாக இளையர்களிடையே திறன்பேசி பயன்பாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அவ்வப்போது இளையர்களை சமூக ஊடகங்களில் இருந்து இடைவேளை எடுக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பதின்ம வயதினருக்கு எப்போது, எங்கு திறன்பேசிகள் வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள்களைப் பெற்றோர் அமைப்பது அவசியம் என்று பொது சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சமூக ஊடகத் தளங்களையும் இணையத்தையும் பயன்படுத்துவதில் சில குறிப்புகளையும்; திறன்பேசி பயன்பாட்டில் இளையர்கள் எவற்றைக் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற பட்டியலையும் இக்கால இளையர்களிடம் பேசித் தயாரித்துள்ளது தமிழ் முரசு.
தனிப்பட்ட விவரங்களை வெளியிடவேண்டாம்
முக்கியமான விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது தேவையற்ற கவனத்தை ஈர்க்கும். வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இதுகுறித்து
14 வயது அஃப்ரீன் ஃப்யிசா கூறுகையில், “என் நண்பர்கள், அல்லது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் சமூக ஊடகத்திலோ இணையத்திலோ வெளியிட மாட்டேன்,” என்றார்.
சமூக ஊடக கணக்கு விவரங்களை பகிர வேண்டாம்
சமூக ஊடக கணக்குகளை முடிந்தவரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்காமல் இருப்பது பாதுகாப்பானதாகும். “முன்பின் தெரியாதவர்களிடம் சமூக ஊடக கணக்கு விவரங்களைப் பகிர மாட்டேன்,” என்றார் பாலகிருஷ்ணன் ஹரி பிருந்தா, 13.
இணையத்தில் உள்ள அனைத்தையும் நம்ப வேண்டாம்
இணையத்தில் நாம் படிக்கும் அல்லது பார்க்கும் எதையும் நம்பாமல் இருப்பது ஒரு நல்ல நடைமுறை. பொதுவாக நமக்கு விருப்பமான ஒரு பொருள் அல்லது சர்ச்சை இருந்தால், அதைப்பற்றி மேலும் விசாரித்து தெளிவு பெறுவதே நன்மை தரும். “குழப்பம் ஏற்படுத்தும் செய்திகளை பற்றி நன்கு ஆராய்ந்து எதிர் வாதங்களையும் கருத்தில்கொண்டு முடிவுக்கு வருவது தெளிவு கொடுக்கும். அதுபோல் மோசடிகள் மற்றும் இணைய மிரட்டல்களுக்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியம்,” என்றார் மாணவி இங் ருய் ஆன், 15.
குறுஞ்செய்தி அல்லது பதிவுகளை அனுப்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்
உணர்ச்சிகள் பொங்கும் நேரத்தில், குறிப்பாக வருத்தமாகவோ கோபமாகவோ இருந்தால் சமூக ஊடகங்களில் உங்கள் ஆழ்மன உணர்வுகளையும் சிந்தனைகளையும் பகிர்வதைத் தவிர்க்கவும்.
அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சமூக ஊடகங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் நமக்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் இணையத்தில் அவர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். “சில நேரங்களில் நான் தனிமையில் இருந்தாலும் இணையத்தில் நண்பர்களைத் தேட மாட்டேன். மற்ற ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சி செய்வேன். ஏனெனில் யார் உண்மையானவர் என்பதை இணையத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ,” என்றார் நிதி சோமசேகர், 14.
இணையத்தில் உள்ளவர்களுடன் ஒப்பிட வேண்டாம்
இணையத்தில் உள்ள அனைவரும் தங்களது உண்மையான விவரங்களை அதில் பதிவிடமாட்டார்கள். எனவே நம்மை அவர்களுடன் ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.