‘ஆற்றல்’ என்ற கருப்பொருளுடன் இந்தாண்டு தமிழ்மொழி மாதம் தொடங்கியுள்ளது. இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை 48 பங்காளி அமைப்புகள் மொத்தம் 47 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.
சனிக்கிழமை மாலை (மார்ச் 30) மீடியாகார்ப் வளாகத்தில் அமைச்சர் இந்திராணி ராஜா தமிழ்மொழி விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மொழி மாதத்தைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், “பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே தமிழ்மொழி புழக்கத்தை கொண்டு சேர்க்க சமூக ஊடகம் ஒரு சிறந்த கருவி.
“தொலைக்காட்சி, யூடியூப் காணொளிகள், மற்றும் டிக்டாக் போன்ற தளங்கள் மூலம் தமிழ்மொழி சிறுவர்களிடம் எளிதில் சென்றடையும்,” என்று குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறையினர் தமிழ்மொழியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இளையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை.
இளையர்களுக்கு அப்பாற்பட்டு சிறுவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை விதைக்க தமிழ்மொழி மாதத்தில் அவர்களுக்கு பலவிதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலக்கியம், கலை, கலாசாரம் ஆகிய கூறுகளில் சிறுவர்களுக்குக் கதை சொல்லும் அங்கம் போன்ற பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.
“புதுமையான வடிவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும் என்பதற்காக ஆற்றல் என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
“இளையர்கள் மொழிமீது வைத்திருக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்க ஆண்டுதோறும் வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி மாதம் மூலம் அம்முயற்சியை கையாண்டு வருகிறது,” என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் சொன்னார்.