33வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
போட்டிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் தீபம்
அதன்படி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றது.
வழக்கமாக சூரிய ஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். ஆனால், ஏப்ரல் 17ஆம் தேதியன்று ஒலிம்பியாவில் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய ஒளியைப் பார்க்க முடியவில்லை.
வானிலை குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு ஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
தொடர் ஓட்டம்
கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்துகொண்டிருந்த ஜுவாலையில் தீபத்தை ஏற்றினார்.
அதன் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் துடுப்புப் படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ் முதல் நபராகவும் தொடர்ந்து பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர்.
கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் பயணித்து இறுதியாக பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 400 நகரங்களில் தொடர் ஓட்டம் நடைபெற்றது.
அப்பொழுது ஏறக்குறைய 10 ஆயிரம் பேரின் கைகளில் தீபம் தவழ்ந்து, இறுதியில் தொடக்க விழா நடைபெறும் பாரிசுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மிகப் பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டதும் போட்டி தொடங்கும்.
ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை இந்த ஜோதி அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். போட்டிகள் முடிந்த பின்னர் அணைக்கப்படும். இந்த ஜோதியை ஏற்றுவதும் ஏந்துவதும் மிகப் பெருமைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது.